tamilnadu

img

எங்களுக்கே பதவி இல்லையா? அதிமுக கூட்டத்தில் அடிதடி 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் அமைதியாக கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென வந்த கும்பல் அடிதடி ரகளையில் ஈடுபட்டது. தொண்டர்கள் மீது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கூட்டம் துவங்கிய உடனே மண்டபத்திற்குள் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைமை என்ற மஞ்சள் நிற கொடியுடன் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் திடீரென மேடையை நோக்கி சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தனர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்தனர். அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி நாற்காலியை தூக்கி வீசினர். இதனால் நாற்காலிகள் அங்கும் இங்கும் பறந்தன. அங்கிருந்தவர்கள் அமைச்சரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.

அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பதவியை மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகறாறு செய்தனர். மேலும் முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை என்று தெரிவித்தனர். அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி ரகளை சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், பதவிக்காக அடிதடி நடந்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க மேலும் ஆளுங்கட்சியின் மோதல்கள் சூடுபிடிக்கும் போல் தெரிகிறது.