தஞ்சாவூர் ஜூன்.10- நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட பட்டுக்கோட்டை மாணவி வைஷ்யா குடும்பத்தினரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல் கூறினர். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் நடத்தி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் பொருட்டு, சமத்துவமற்ற வகையிலும், சில மாநில அரசுகள் நிராகரித்த போதிலும், மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி தமிழக மாணவர்களை வஞ்சித்து வருகிறது. இதனால் மருத்துவராகும் கனவில் இருந்த ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, சாதாரண மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற, பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்த நம்புராஜன் என்பவரது மகள் வைஷ்யா என்பவர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவி வைஷ்யாவின் தந்தை நம்புராஜன், அவரது தாயாரை ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, எஸ்.பாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பட்டுக்கோட்டை ஒன்றியச்செயலாளர் குட்டி என்ற சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, நடந்த விபரங்களை கேட்டறிந்து, ஆறுதல் கூறினர்.