சீர்காழி, ஜூன் 1-சீர்காழி அருகே மாதிரவேளுர் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேளுரில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 150 முதல் 200 வரை எண்ணிக்கையில் நோயாளிகள் பல்வேறு பொது மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் சுவரில் விரிசல் விழுந்துள்ளதாக தொடர் புகார் எழுந்துள்ளது. மருத்துவர் அறை, மருந்தாளுநர் மற்றும் மருந்து வைக்கப்பட்டுள்ள அறை, ஊசி போடும் அறை, பிரசவ அறை உள்ளிட்ட 8 அறைகளிலும் தரை தளம் உள்வாங்கியுள்ளது. பிரசவ அறையின் தரைப் பகுதியிலிருந்து வெளியே செல்லும் வகையில் 3 அடி நீளத்திற்கு ஓட்டை விழுந்துள்ளதால், பூச்சிகள் மற்றும் பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் எளிதில் பிரசவ அறைக்குள் வந்து விடுகின்றன. இதனால் பாதுகாப்பற்ற நிலையில் இந்த சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.தரைதளம் அனைத்தும் உள்வாங்கியுள்ளதால் இங்கு வரும் நோயாளிகள் கால் இடறி கீழே விழுந்து காயமடைகின்றனர். கட்டடத்தின் மேற்கூரையும் வலிமையற்று காணப்படுவதால் மழை நீர் கட்டடத்திற்குள் கசிகிறது. இங்கு வரும் அனைவரும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை மேம்படுத்தி சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.