திருப்பூரில், திருமணமான 11 மாதத்தில் பிரீத்தி என்ற பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார் மற்றும் மாமியார் உமா ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி (26). இவருக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஸ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அண்மையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்துள்ளனர். இதனால் ப்ரீத்தி கணவர் வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 5-ஆம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த நல்லூர் போலீசார், ப்ரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார் மற்றும் மாமியார் உமா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.