tamilnadu

திருப்பூரில் மாத சீட்டு நடத்தி ஒரு கோடி மோசடி பெண் மீது காவல் ஆணையரிடம் பொதுமக்கள் புகார்

திருப்பூர், மே 28 –திருப்பூரில் மாதச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக பெண் மீது பொது மக்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.திருப்பூர், பல்லடம் சாலை, வீரபாண்டியை அடுத்த கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் வஞ்சீஸ்வரி (எ) மணி, அவரது சகோதரியான பூங்கொடி மற்றும் சாமிநாதன் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள சுமார் 200 நபர்களை வைத்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.இந்நிலையில் அவர்களிடம் சீட்டு போட்டவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பணம் கொடுக்கவில்லை. இது குறித்து பணம் கொடுத்தவர்கள் கேட்டதற்கு கடன் ஏற்பட்டு விட்டதாகவும், வீட்டை விற்பனை செய்து பணத்தை கட்டுவதாகவும் கூறியுள்ளார். வஞ்சீஸ்வரிக்கு சொந்தமாக கணபதிபாளையத்தில் உள்ள வீட்டை ரூ.85 லட்சத்திற்கு விற்பனை செய்து பணத்தை வாங்கி கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.இதை அறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் அளவில் பணம் கொடுக்க வேண்டிய நிலையில் தங்களை ஏமாற்றிச்சென்ற சீட்டு நடத்திய பெண்ணிடமிருந்து பணத்தை மீட்டு தருமாறு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.