தஞ்சாவூர், மே 4-மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி திட்டமிடப்பட்டு நாற்றங்கால் மற்றும் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோகூர், கீழக்குறிச்சி, ஒலையகுன்னம் உள்ளிட்ட கிராமங்களில நெல் சாகுபடி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது நடவு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு உயிர் எதிர்க்கொல்லியான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சானக் கொல்லியை பயன்படுத்த வேண்டும். இது மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேர்அழுகல், வாடல்நோய், நாற்றழுகல், வேர்வீக்க நோயை கட்டுப்படுத்தி, இலை வழியாக பரவும் நோய்களான குலைநோய், இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் பாதிப்பை குறைக்கும். இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான் ஆகியவற்றினால் ஏற்படும் வீரியத்தையும் குறைக்கும். தொடர்ந்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்க ளான ஆக்ஸின் ஐப்ரலின் மற்றும் இன்டோல் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. நெல் விதை நேர்த்தி செய்யும் பொழுது ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட வேண்டும். பின்பு விதைகளை ஈர சாக்குகளில் வைத்து நிழலில் உலர்த்தி முளைக்கட்டி விதைக்க வேண்டும். அதேபோல் நாற்றுகளை நனைத்து பயன்படுத்தும் போது ஒரு கிலோ சூடோமோனஸ் கலவையை தண்ணீரில் கலந்து ஒரு ஏக்குருக்கு தேவையான நாற்றுகளை அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு நட வேண்டும். அதிக நேரம் ஊற வைத்தால் அதன் செயல்திறன் கூடுதலாக இருக்கும். வயலில் நேரடியாக பயன்படுத்தும்பொழுது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனஸ் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து இட வேண்டும். நெல்லில் தெளிப்பு முறையை கையாளும்போது சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீத கரைசலை(ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில்) நடவு நட்ட 45 நாட்கள் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை மற்ற இராசயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் பயன்படுத்தக்கூடாது. இந்த பாக்டீரியா கலவையை தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். மற்ற உயிர் உரங்களுடன் சூடோமோனாஸ் கலவையை பயன்படுத்தும்போது நோய்களை வெகுவாக கட்டுப்படுத்துகிறது. இது பயிர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதுடன் மண்ணிலுள்ள கனிம பொருட்களை பயன்படுத்தி பயிர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை தருகிறது. மேலும் மகசூலை அதிகரிக்க வழிவகை செய்கிறது. இவற்றினால் சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாவதில்லை என மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் திலகவதி கேட்டுக் கொண்டுள்ளார்.