tamilnadu

img

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள காரணமாக வரும் நாட்களில் தென் தமிழகம், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழகக் கடல் ஆகிய பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.