tamilnadu

img

தர்காவை இந்து கோயிலாக மாற்ற முயன்ற சங் பரிவாரை தடுத்தவர் கிரிஷ் கர்னாட்

கிரிஷ் கர்னாட் ஒரு மிகப்பெரிய நாடக ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்றே அறியப்படுகிறார். ஆனால் அவர் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும்கூட ‘மனசாட்சியின் பாதுகாவலர்’ என்று சொல்லத்தக்க முறையில் செயல்பட்டார். 18 ஆம் நூற்றாண்டு மன்னர் திப்பு சுல்தான், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நைப்பால், ‘அர்பன் நக்சல்’ (நகர்ப்புற நக்சல்) போன்ற விஷயங்களில் கிரிஷ் மீது பலருக்கும் விமர்சனம் இருக்கிறது. அதற்காக அவர் சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிக்கப்படுகிறார். அவர் இறந்த பிறகும் இந்த விமர்சனங்கள் தொடர்கின்றன. உண்மை என்னவென்றால் கர்னாட் ஒரு மக்களுக்கான சிந்தனையாளராக யாரையும் விட்டுவைக்கவில்லை. காங்கிரஸ் ஆண்டபோதும் சரி, பிரதமர் வாஜ்பேயி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆண்டபோதும் சரி அவர் தமக்கே உரிய முறையில் தனது கருத்துகளை வெளிப்படுத்திவந்தார். 44 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அவசர நிலை அமலாக்கப்பட்டபோது ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்யுட் ஆஃப் இந்தியாவின் இயக்குனர் பதவியை ராஜிநாமா செய்தது அவர் எடுத்த முதல் முக்கிய நிலைப்பாடு. அவசரச் சட்டம் அமலாக்கப்பட்டவுடன் அரசு அதிகாரிகள் அவசர சட்டத்தைப் புகழ்ந்து ஒரு திரைப்படம் எடுக்க சொன்னதும் அவர் தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இது நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய சங்கீத நாடக அகாடமியின் தலைவர் என்ற முறையில் அயோத்தியில் சமூக ஒற்றுமைக்காக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்தார். அவருக்கு வாஜ்பாயையும் ரத யாத்திரை நடத்திய எல்.கே.அத்வானியையும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்றபோதும் அவர் இதைச் செய்தார். ‘அந்த நேரத்தில் இப்போது இருக்கும் அளவு இவ்வளவு வெறுப்புணர்வு இல்லை. அவர் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக இல்லை. சமூக ஒற்றுமையிற்கு ஆதரவாக இருந்தார்’ என எழுத்தாளரும் மத்திய சங்கீத நாடக அகாடமியின் முன்னாள் தலைவருமான மருளசித்தப்பா கூறினார். வரலாற்று கதாபாத்திரங்களை நிகழ்கால சூழ்நிலையோடு ஒப்பிட்டு அவர் எழுதிய துக்ளக், திப்பு சுல்தானின் கனவுகள், தண்டா கதை, ராட்சச தாங்கடி போன்ற நாடகங்கள் மூலம் கர்னாடின் சமூக ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பை நாம் அறியலாம். ‘அவர் வரலாற்றையும் புராணங்களையும் தன்னுடைய கதைக்குரிய பொருளாக எடுத்து நாடக கலையில் ஒரு புரட்சியை உருவாக்கினார். ஆனால் இன்றுள்ள கலாச்சார, சமூக, அரசியல் நிலை அவர் பார்வையிலிருந்து வேறுபட்டிருப்பதனால் நிறைய எதிர்ப்புகள் வருகின்றன. அவர் ஒரு வரலாற்று மனிதர் என்பதை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்வர். அவர் கர்நாடகாவின் மனசாட்சியாக இருந்துள்ளார்’ என கன்னட எழுத்தாளர் மல்லிகா காந்தி கூறியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு தத்தாத்ரேயா சிலையை, பாபாபுடங்கிரி மலைக்கோயிலில் நிறுவ சங் பரிவார் எடுத்த முயற்சியை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தி எதிர்த்தார் அவர். பாபாபுடங்கிரி சுவாமி தர்கா இந்து, முஸ்லிம் சமயத்தவர் வழிபடும் இடமாக இருந்தது. அங்கே தத்தாத்ரேயா சிலையை நிறுவி அதை இந்து கோயில் என்று ஆக்க முயன்றது சங் பரிவார். ‘நாங்கள் இதற்கு முன்னாலிருந்த அரசு(காங்கிரஸ்) சரியாக செயல்படவில்லை என நினைத்தோம். அதனால் அந்த இடத்திற்கு சென்றோம். அங்கே எங்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. அதற்கு அவர் எங்களை கைது செய்து கொள்ளுங்கள் என்றார் கர்னாட்’ என பட தயாரிப்பாளர் சைதன்யா கே.எஸ். கூறினார். அதன்பிறகு நான் அவரிடம் “நம்மை கைது செய்துகொள்ளலாம் என ஏன் சொன்னீர்கள்” என கேட்ட போது “நம்முடைய இந்த போராட்டத்தின் குறிக்கோள் நாம் சட்டத்தை மதிக்கவேண்டும் என்பதே ஆகும். அதை மதிக்காததால் தான் மேலே இருப்பவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். நாம் சட்டத்தை மதிக்கவேண்டுமென கூறினார் அவர்” என்று சைதன்யா நினைவு கூர்ந்தார்.

‘அவர் பழங்காலத்திலுள்ள சமூக ஆர்வலர் அல்ல. கர்னாட் தீவிர மக்களாட்சியின் மேல் நம்பிக்கை கொண்டுள்ள குடியுரிமை சமூகத்தை சேர்ந்தவர். தவறான ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்’ என எழுத்தாளர் ரஹ்மத் தரிகெரே கூறினார். ‘அவர் சமூகத்தை உற்று நோக்குபவர். அவர் இந்துத்துவாவிற்கு எதிரானவர்’ என கர்நாடக சமூக ஒற்றுமை அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் வி.எஸ்.ஸ்ரீதரா கூரியுள்ளார். அவர் அரசியலை மட்டும் விமர்சனம் செய்பவர் அல்லர். இரண்டு வருடத்திற்கு முன்னர் மும்பை இலக்கிய விழாவில் நோபல் பரிசு பெற்ற வி.எஸ். நைப்பாலுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

2014 மக்களவை தேர்தலுக்கு பின்னர் ஒரு வலைத்தளத்திற்கு கொடுத்த பேட்டியில் முன்னாள் டாக்டர் மன்மோகன் சிங்கை “கோழை” என கூறினார். சென்ற ஆண்டு கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்கு வரும்போது “மீ டூ அர்பன் நக்சல்” என்ற ஹாஷ்டாக் கொண்ட பதாகையை அணிந்துகொண்டு வந்தார். வெளிப்படையாக பேசுவது நக்சல் என்றால் நானும் நக்சல் தான் என்பதே அவருடைய கருத்து . ‘சமூக சிந்தனையாளரான அவர் எந்த ஒரு கட்சியை சேர்ந்தவரும் அல்ல. ஆனால் ஆளும் கட்சியை எப்போதும் விமர்சனத்துக்குரிய பார்வையோடு பார்ப்பார்’ என்கிறார் சைதன்யா. ‘மக்கள் சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களான யுஆர்.அனந்தமூர்த்தி மற்றும் லங்கேஷின் இறப்புக்கு பின்னர், கிரிஷ் கர்னாட் மக்களின் பார்வைக்கு அதிகம் வந்தார். “அவர்களின் இடத்தை நிரப்பியுள்ளார். ஆனால் யாருக்கும் சார்பாக இருக்கவேண்டும் என அவர் முயலவில்லை’ என்று ரஹ்மத் கூறியுள்ளார்.

- இம்ரான் குரேஷி, பிபிசி தமிழ்