tamilnadu

img

சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்யும் உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று நேற்று வழங்கிய உத்தரவை  சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி  உள்ளது.

திருப்பூரில் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்கில் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீஸ் அனுமதியின்றி நடத்தப்படும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு போராட அனுமதித்தால் அது மோசமான பேராபத்தை ஏற்படுத்திவிடும். எங்களை பொறுத்தவரை போராட்டத்துக்கான காரணத்தை பார்க்கவில்லை. இந்த போராட்டத்தால் ஏற்படுகின்ற பாதிப்பைத்தான் பார்க்கிறோம். 
திருப்பூரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவ மனை செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அனுமதியின்றி குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் எந்தவொரு போராட்டமும் நடத்த போலீசார் அனுமதி அளிக்கக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கை இன்று  மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையில் நேற்று திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்றைய  உத்தரவை நிறுத்தி வைக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.