tamilnadu

img

உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என எஸ்.ஏ பாப்டே தலைமையிலான விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதேசமயம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் வழக்கறிஞர்களும், பெண் உரிமை ஆர்வலர்களும் இன்று காலை உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் போராட்டம் நடந்தால், அதனை சமாளிக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.