tamilnadu

img

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஜாமினை எதிர்த்து வழக்கு - ஜனவரி 19 விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கு, வரும் 19-ஆம் தேதி விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த புகாரில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 
இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான வழக்கு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி விசாரணைக்கு நடந்தது. அப்போது இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது என்று கூறி, துணைவேந்தர் ஜனவரி 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டிருந்தார். 
இந்த நிலையில், ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் அவசரமாக விசாரிக்க காவல்துறை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை அடுத்து, இவ்வழக்கு, வரும் 19-ஆம் தேதி விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.