மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யாததால், கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு மிகக்குறைந்த அளவே நீர் வரத்து காணப்படுகிறது.
அணைக்கு செவ்வாயன்று (ஆக. 17) விநாடிக்கு 4 ஆயிரத்து 379 கனஅடியாக இருந்த நீர்வரத்து, புதனன்று (ஆக. 18) 4 ஆயிரத்து 23 கனஅடியாக குறைந்தது. இதனிடையே, காவிரி டெல்டா மாவட் டங்களின் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதமும், மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.நீர்வரத்தை விட, நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 11-ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 73.97 அடியாக இருந்தது. ஒரு வார இடைவெளியில் தற்போதைய நீர் மட்டம் 68.09 அடியாவும், நீர் இருப்பு 31.08 டிஎம்சி-யாகவும் உள்ளது.