tamilnadu

img

மகுடஞ்சாவடியில் மண்மாதிரி சேகரிக்கும் பணி துவக்கம்

சேலம், மே. 5 - 
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தேசிய நீடித்த வேளாண்மை இயக்கத்தின் (என்.எம்.எஸ்.ஏ) கீழ்  மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டு  பயிர்களின் மகசூலை பெருக்குவதற்காக மண்மாதிரிகள் சேகரித்து  ஆய்வு செய்யும் மாதிரி கிராம செயல் விளக்கத் திட்டம் நடைபெற்று வருகிறது. 
கடந்த ஆண்டு கெடிக்காவல் கிராமத்தில் உள்ள 179 பண்னைக் குடும்பங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்த ஆய்வுகளின் அடிப்படையில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கெடிகாவல் கிராமத்தில்  50 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு மண் மாதிரி அடிப்படையில் செயல்விளக்கத்திடல் அமைத்திட வேளாண்மைத்துறையின் மூலமாக இடுபொருள் வழங்கப்பட்டு விவசாயிகளின் வயலில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் செயல்விளக்கத் திடலில் மண் மாதிரி அடிப்படையில் உரமிடுவதன் வாயிலாக பயிரின் மகசூல் பலன் அதிகரிக்கப்படும் என்பதும் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
இதேபோல் நடப்பாண்டும் இத்திட்டத்தின்கீழ்  எர்ணாபுரம், அ. தாழையூர்,  நடுவனேரி, கண்டர்குலமாணிக்கம் மற்றும் இடங்கணசாலை ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கிராமத்திலுள்ள அனைத்து பண்னைக் குடும்பங்களிலுள்ள மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதையடுத்து இடங்கணசாலை கிராமத்தில் மண்மாதிரி சேகரிக்கும் பணி வேளாண்மை உதவி இயக்குநர் வி. மணிமேகலாதேவி வழிகாட்டுதலின் பேரில் உதவி வேளாண்மை அலுவலர் மோகண  லட்சுமனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுடன் வேளாண்மை அலுவலர் கு.பழனிசாமி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ந. ஸ்ரீரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.