ஆரணி, ஆக. 30- ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் இதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு வாங்கினார். நிகழச்சியில் அவர் பேசுகையில்,ஆரணியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என 50 ஆண்டுகால கோரிக்கை மக்களிடையே எழுந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தின் மைய பகுதியில் ஆரணி உள்ளது. வந்தவாசி, ஆரணி, போளூர், செய்யாறு, ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம் ஆகிய 6 தாலுகாக்களை கொண்டு ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அது விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும். விரைவில் ஆரணி புதிய மாவட்டமாக உருவாகும். இதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது என்றார்.