tamilnadu

img

புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றியமைப்பு!

புதுச்சேரியில் பள்ளிகள் துவங்கும் நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு தொடங்கும் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நிகழ் கல்வியாண்டு (2024-25) முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 15 -ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் நேரத்தை மாற்றி அமைத்து புதுச்சேரி அரசின் கல்வித் துறை உத்தரவிட்டது.

அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். காலை 9.15 வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும். தினமும் மொத்தம் 8 பாடவேளைகள் நடைபெறும். காலை 4 பாடவேளைகளும், பிற்பகல் 4 பாடவேளைகளும் நடைபெறும். காலையில் முதல் இரு பாடவேளைகள் முடிந்த பிறகு காலை 10.45 மணி முதல் 10.55 மணி வரையில், இடைவேளை விடப்படும். மதியம் உணவு இடைவேளையானது பிற்பகல் 12.25 மணி முதல் 1.30 மணி வரை இருக்கும். மதியம் இரு வகுப்புகள் முடிந்த பிறகு பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரை இடைவேளை இருக்கும். காலையில் நடைபெறும் ஒரு பாடவேளை 45 நிமிஷங்களும், பிற்பகல் ஒரு பாடவேளை 40 நிமிஷங்களும் இயங்கும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாட வகுப்புகள் நேர மாற்ற உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மீண்டும் மாற்றியமைத்து புதுச்சேரி அரசின் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் காலை 9 மணிக்குப் பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும்.காலை 9.30 வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.25 வரை மூன்று பாடவேளைகளும் நடைபெறும். மதியம் உணவு இடைவேளையானது 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

மதியம் உணவு இடைவேளையானது பிற்பகல் 12.40 மணி முதல் 1 மணி வரை இருக்கும். மதியம் இரு வகுப்புகள் முடிந்த பிறகு பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரை இடைவேளை இருக்கும். காலையில் நடைபெறும் ஒரு பாடவேளை 45 நிமிஷங்களும், பிற்பகல் ஒரு பாடவேளை 40 நிமிஷங்களும் இயங்கும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாட வகுப்புகள் நேர மாற்ற உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.