சென்னை, மார்ச் 9- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் பொதுமக்கள் பீதியோ, பதற்றமோ அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். வெளிநாடுகளிலிருந்து திரும்புவோர் அனைவருக்கும் விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்புவோர் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள். அறிகுறி இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனிவார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்களன்று(மார்ச் 9) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி, செங்கோட்டையன், விஜயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டு அறிந்தார். தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார். சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை களை துரிதப்படுத்துமாறும் அறிவுரை வழங்கினார்.