tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா

பிகாஜி காமா மும்பை மாகாணத்தில் செல்வாக்கு மிக்க பார்சி குடும்பத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடையவர். இந்திய விடுதலைபோராட்டத்திற்கு உதவியாக ஜெர்மனி,பிரான்சு போன்ற நாடுகளுக்கு சென்றுஆதரவு திரட்டியவர். மேடம் பிகாஜி 3 ஆகஸ்ட் 1885ல், வழக்கறிஞர் ருஸ்தம்  காமாவை மணந்தார்.

1896 அக்டோபரில் மும்பை மாகாணம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பிளேக் நோய் பாதிப்பும் ஏற்பட்டது. அப்போது கிராண்ட் மருத்துவ கல்லூரி (பின்னாளில் ஹாப்கின்ஸ் பிளேக்தடுப்பூசி ஆய்வு மையமானது) சார்பில் பணிபுரிந்த பல்வேறு குழுக்கள் ஒன்றில் காமா இணைந்து சேவையில் ஈடுபட்டார். அதன் விளைவாக காமாவும் பிளேக் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, உடல்நிலையை சீர்படுத்த 1902இல் இலண்டனுக்கு சென்றார். இலண்டனில் பல இந்திய தலைவர்களை சந்தித்தார். குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸின் பிரிட்டிஷ் கமிட்டின் தலைவர் தாதாபாய் நௌரோஜியை சந்தித்தார். அங்கிருந்தபடியே இந்திய விடுதலைப் புரட்சியாளர்களுக்கு உதவினார்.பின்னர் பாரிஸ் சென்றார். அங்கு பாரிஸ் இந்திய கழகம் எனும் அமைப்பை எஸ்.ஆர்.ராணா, எம்.பி.கோத்ரெஜ் ஆகியோரோடு சேர்ந்து துவக்கினார். 1907 ஆகஸ்ட் 22-ல் ஜெர்மனியில் நடந்த 2வது சோசலிஸ்ட் காங்கிரஸில் கலந்து கொண்டார். தான் உருவாக்கிய இந்தியக் கொடியை வெளிநாட்டு மண்ணில் முதல் முதலில், 22ஆம் நாள் ஆகஸ்டு 1907ல் ஜெர்மனியில் ஏற்றினார்.பிகாஜி ருஸ்தம் காமாவின் நினைவைப் பாராட்டும் விதமாக இந்திய அரசின் அஞ்சல் துறை அவரது உருவம் தாங்கிய அஞ்சல் தலையை 26 சனவரி 1962இல் வெளியிட்டது.