புதுதில்லி:
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட, உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) என்ற மதிப்பீடு பயன்படுத்தப்படுகிறது.அந்த வகையில், மோடி ஆட்சியின் ஐந்தாண்டுகளிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கொஞ்சமும் முன்னேற்றம் அடையவில்லை. மாறாக, இப்போது வரை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது என்பதை ‘ஸ்டேட் பாங்க் இந்தியா’வின் ஆய்வறிக்கையும் படம்பிடித்துள்ளது.
மோடி அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, 2015 - 2016 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி 8.2 சதவிகிதமாக இருந்தது. அது 2016 - 2017 நிதியாண்டில் 7.1 சதவிகிதமாகவும், 2017- 2018 நிதியாண்டில் 6.7 சதவிகிதமாகவும் சரிந்தது. தற்போது இந்த சரிவு, 2018 -2019 நிதியாண்டிலும் தொடரும் என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’, அதில், 2018 - 2019 நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 7 சதவிகிதத்திற்கும் கீழே செல்லும்; இதற்கு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிலவிய மோசமான நிலையே காரணம் என்று கூறியுள்ளது. நான்காவது காலாண்டில் ஜிடிபி விகிதம் 5.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. தங்களின் இந்த ஆய்வு, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய மோசமான பொருளாதார நிலை தொடர்வதையே மீண்டும் காட்டுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளர்ச்சி விகிதம் மிகவும் மோசமான நிலையிலேயே தொடர்வதால், இந்திய ரிசர்வ் வங்கி வரப்போகும் கூட்டங்களில் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக, வட்டி விகித குறைப்பு 0.50 சதவிகிதம் வரை இருக்கலாம் என்றும் கூறும் இந்த ஆய்வறிக்கை, 2018 -2019-ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ஜிடிபி 6.9 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் கணித்துள்து.
எனினும் இது தங்களின் முதற்கட்ட அறிக்கைதான் என்று குறிப்பிட்டுள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ அறிகக்கை, மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இரண்டாம் கட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. பிரதமராக பதவியேற்றபின் அரசு முறையான கொள்கைகளை அமல்படுத்தினால் மட்டுமே வளர்ச்சி அதிகரிக்கும். இல்லையேல் மீண்டும் சிக்கல்தான் என்றும் எச்சரித்துள்ளது.
இதேபோல, தனியார் வங்கியான ஐசிஐசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி தலைமையிலான பிரதான அரசுக்கு பற்பல சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கண்டிப்பாக மோடி அரசுக்கு தேவைப்படும் என்று கூறியுள்ளது.“வளர்ச்சி விகிதங்கள் மிக பலவீனமாக இருப்பதை காண முடிகிறது. எனினும் வலுவான அரசாங்க கொள்கையின் ஆதரவு மற்றும் சிறந்த நாணய கொள்கை சூழல் ஆகியவை இந்த நிதியாண்டின் இரண்டாம் பாகத்தில் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதோடு பணவீக்கமும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது கவனிக்கதக்க விஷயமாகும். 2019 - 2020-இல் பணவீக்கம் 4 சதவிகிதமாக உயரலாம்” என்றும் ஐசிஐசிஐ வங்கி கணித்துள்ளது.
இதனிடையே, இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 6-ஆம் தேதி அடுத்த இரண்டாவது பணவியல் கொள்கை தொடர்பான கூட்டத்தை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.