tamilnadu

img

லடாக் அருகே பாக்., விமானங்களின் நடமாட்டம்?

ஸ்ரீநகர், ஆக. 12- லடாக் எல்லை அருகே பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கான தனது நாட்டு தூதரையும் திரும்ப அழைத்துக் கொண்டது.  இதனால் இரு நாடுளுக்கு இடையிலான உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், லடாக் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் பகுதியான ஸ்கர்டு விமானப்படை தளத்தில் ஜே.எப்.17 ரக போர் விமானங்களை நிறுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த விமானப்படை தளத்தில் பாகிஸ்தானின் சரக்கு மற்றும் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. 3 சி-130 சரக்கு விமானங்கள் சனிக்கிழமை அந்த விமானப்படை தளத்துக்கு தேவையான கருவிகளை கொண்டு சென்றுள்ளன. பாகிஸ்தான் விமானப்படை ராணுவத்துடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே போர் விமானங்களை அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் நடமாட்டத்தை உளவுத்துறையுடன் இணைந்து இந்திய ராணுவமும், விமானப்படையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.