tamilnadu

img

கவிஞர், செய்தியாளர் காவியன் காலமானார்....

நாகப்பட்டினம்:
தீக்கதிர் நாளிதழின் நாகை மாவட்டச் செய்தியாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவரும், மாநிலக்குழு உறுப்பினருமான ந.காவியன் (77) செவ்வாயன்று அதிகாலைகாலமானார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற சில மணிநேரங்களில் அவரது உயிர்பிரிந்துவிட்டது. 

ந.காவியன் திருபூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இடதுசாரி இயக்கத்தில் (சிபிஎம்)மிக தீவிரமாய் பயணித்தவர்.  கவிதை,சிறுகதைகள், நாடகம்  உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.  சாதி, மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட இவரின் திருமணத்தை தந்தை பெரியார் நடத்தி வைத்துள்ளார் என்பதும், அது பெரியார் நடத்தி வைத்த இறுதி மதமறுப்பு திருமணமுமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி சரோஜா அரசு கருவூலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், மகன் மலர் மன்னன்  பெங்களூரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்பணியாற்றுகிறார். மகள் கவின்மலர் சமூக செயற்பாட்டா ளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றுகிறார். 

மறைந்த தோழர் காவியனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து, நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி, தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, துணைப் பொதுசெயலாளர் களப்பிரன், தீக்கதிர் மதுரை பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், திருச்சி பதிப்பு மேலாளர் பன்னீர்செல்வம், விவசாய சங்க மாநிலத் தலைவர் வீ.சுப்ரமணியன், விதொச மாநில பொதுச் செயலாளர்வீ.அமிர்தலிங்கம், சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், சிபிஎம் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ஜி.ஜெயராமன், எம்.முருகையன், டி.லதா, ஏ.வேணு, கோவை சுப்ரமணியன், நாகை ஒன்றிய செயலாளர் பி.டி.பகு, சிபிஎம் நாகை நகரச் செயலாளர் மணி, கீழையூர் ஒன்றியச் செயலாளர் கே.சித்தார்த்தன், திருமருகல் ஜெயபால், வேதாரண்யம் வி.அம்பிகாபதி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்  ஏ.ட்டி அன்பழகன், தமுஎகச மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி மணி, மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.கணேசன்,வி.சிங்காரவேலன், ப.மாரியப்பன்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், டி.துரைக்கண்ணு, கே.பி. மார்க்ஸ், அதிமுக சார்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன், சிபிஐ சார்பில் ஒன்றிய செயலாளர், ஜி.பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வி.சரபோஜி, நகரப்பொறுப்பாளர் சுந்தரம், சமூக செயற்பாட்டாளர் அற்புதம்மாள் (பேரரறிவாளன் தாயார்), தீக்கதிர் செய்தியாளர்கள் எஸ்.நவமணி, சு.மதி, செல்லதுரை, ஜகுபர் அலி, ஜான்சன், வேலவன்,நாகை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் மற்றும் அனைத்துக்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ந.காவியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் கூட்டம் - உடல்தானம்
தமுஎகச மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து, சிபிஎம் மாவட்ட செயலாளர் நாகைமாலி, தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, விதொச மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு திசைகளிலும்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவுகளில் அழகாய், கம்பீரமாய், இலக்கியமாய், கவிதையாய், உரைநடையாய், இலக்கணமாய், புரட்சியாய் ஒலித்த கவிஞர் காவியன் குரலின் ரசிகர்கள் என ஏராளமானோர் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாகத் தரப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

படக்குறிப்பு : காவியன் உடலுக்கு நாகை மாலி, வி.மாரிமுத்து,  எஸ்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.