tamilnadu

img

போக்குவரத்து வழித்தடங்களை தனியார்மயமாக்கிவிடுவாராம்

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டும் தெலுங்கானா முதல்வர்

ஹைதராபாத்,நவ.3- நவம்பர் 5 ஆம் தேதிக்குள் எந்தவித நிபந்தனையும் இன்றி பணிக்குத் திரும்ப வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மிரட்டல் விடுத்துள்ளார்.இதனை தொழிற்சங்கத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.  தெலுங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை முழுமையாக அரசுடன் இணைக்க வேண்டும். காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும். ஓட்டுநர்,நடத்துநர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  48 ஆயிரம் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது. பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்தனர். 

ஆனால் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் போக்குவரத்துத் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி,அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வுகாணாமல் அராஜகமான முறையில் நடந்து வருகிறார் என்று தொழிற்சங்கத்தினர் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர்.  இந்நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் அவகாசம் அளிக்கிறேன். நவம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவுக்குள் எந்தவித நிபந்தனையும் இன்றி பணிக்கு திரும்ப வேண்டும். இந்த கால அவகாசத்திற்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது பணி முடிவுக்கு வந்துவிடும். நிரந்தரமாக அவர்கள் வேலையை இழக்க நேரிடும். போராட்டத்தை முடித்துக் கொள்ளாவிட்டால் 50 சதவீத போக்குவரத்து வழித்தடங்களை தனியார்மயமாக்கிவிடுவேன் என்று கூறியுள்ளார்.