tamilnadu

img

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்நாவிஸ்

மகாராஷ்டிராவில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யாரும் எதிர்பாராத சூழலில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்.எல்.ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆகிய கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்காமல், 105 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைத்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பாஜக தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு, தனது பெரும்பான்மையை நாளை  மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் முதலில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், தற்போது பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.