மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விகாஸ் இன்ஜின் பரிசோதனை வெற்றி
திருநெல்வேலி, மே 28- காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மேம்படுத்தப்பட்ட விகாஸ் இன்ஜின் பரிசோதனை 7 வினாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளுக்கான இன்ஜின்களை சோதனை செய்து ஆய்வு நடத்தி அனுப்பும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் செயற்கைக்கோளை கொண்டு செல்லும் விகாஸ் இன்ஜின்களை தயாரிக்கும் பரிசோதனை பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி விகாஸ் என்றழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் பரிசோதனை மே 28 புதனன்று 7 வினாடிகள் மேற்கொள்ளப் பட்டது.சோதனையின் முடிவில் பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ மைய அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனையில் விஞ்ஞானிகள் பலர் பங்கேற்றனர்.