tamilnadu

img

வட இந்தியாவில் முயற்சித்த வெறுப்பு அரசியல் கேரளாவில் எடுபடாது

வட இந்தியாவில் முயற்சித்த வெறுப்பு அரசியல் கேரளாவில் எடுபடாது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

கோட்டயம் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் சிங்கவனத்தில் ஞாயிறன்று ஞானயா சமூக மகாசங்கமத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.  அவர் பேசுகையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருகிறது. பைபிள்களை எரிப்பவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்து வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூடங்கள் தாக்கப்படுகின்றன. இதுபோன்ற வன்முறைக்கு அங்குள்ள அரசுகளின் (பாஜக ஆளும் மாநிலங்கள்)  ஒத்துழைப்பும் உள்ளது. கடந்த ஆண்டு, நாட்டில் 1,318 வெறுப்பு பிரச்சாரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றில், 43% கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரானவை. இந்த இருண்ட காலங்களில், கேரளா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. கேரளாவில் 10 ஆண்டுகளாக வகுப்புவாத மோதல்கள் இல்லை. கேரளாவில் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் வகுப்புவாத அமைப்புகள் உள்ளன. அத்தகையவர்கள் தலையை உயர்த்த முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் சொந்த நம்பிக்கைகளுடன் கேரளாவில் வாழ முடியும். கேரளாவில் தான் அவர்கள் மற்ற மதக் குழுக்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ முடியும். மதச்சார்பின்மை என்பது வெறும் வார்த்தையல்ல. அது கேரளாவின் உயிர்நாடி. வட இந்தியாவில் முயற்சித்த வெறுப்பு அரசியலை பல்வேறு வடிவங்களில் கேரளாவிற்கு இறக்குமதி செய்ய முயற்சிப்பவர்களின் எந்த நிகழ்ச்சி நிரலும் இங்கு செயல்படுத்த முடியாது” என அவர் கூறினார்.