tamilnadu

img

128 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, அக். 24- இலங்கை கடற்படை யால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 199 படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு வியாழனன்று (அக்.24) எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், 2 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 23 அன்று எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது  செய்துள்ளனர். இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவது குறித்து நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன். இருப்பினும், இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளன. எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு  நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என நான் நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.