ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக் கோரி மனு
ஆலோசித்து முடிவு: அப்பாவு தகவல்
சென்னை, ஜூன் 15 - ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ்-க்கு எதிராக தேனியைச் சேர்ந்த மிலானி இந்த மனுவை அளித்திருந்தார். மனுவில், “அதிமுக எம்எல்ஏவாக இருக்கும்போதே அக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மனு தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று பேரவைச் செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அதிமுகவின் சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பாஜக கூட்டணியில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.