tamilnadu

img

இந்தியாவிலேயே முதன்முதலில் மே தினம் சென்னையில்தான் கொண்டாடப்பட்டது!

இந்தியாவிலேயே முதன்முதலில் மே தினம் சென்னையில்தான் கொண்டாடப்பட்டது!

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, மே 1 - சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ‘மே தினப் பூங்கா’வில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உழைப்பாளர் தின உறுதி மொழியும் ஏற்றார். இதனையடுத்து அவர் பேசியதாவது: “எட்டு மணி நேரம் வேலை எனும் உரிமைப் போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன் முதலில், ‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலர் தலைமையில் ‘மே தினம்’ கொண்டாடப்பட்டது, சென்னை மாநகரத்தில் தான்.  திராவிடர்கள் என்றாலே தொழிலாளர் கள்தான் என்று தந்தை பெரியார் பெருமை யோடு குறிப்பிட்டுள்ளார். சென்னை நகரம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது. கடந்த 1932-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழிலே மொழிபெயர்த்து தந்தவர் தான் தந்தை பெரியார். ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு சென்றுவிட்டு தமிழகத்திற்கு திரும்பிய தந்தை பெரியார் இனி அனைவரையும் ‘தோழர்கள்’ என்றுதான் அழைக்க வேண்டும் என்றார். மே நாளை தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இசை நிகழ்ச்சிகளோடு கொண்டாட வேண்டும் என்றார். 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் மே 1 அன்று ஊதியத்தோடு கூடிய விடுமுறையை கொண்டு வந்தார், முதல்வர் அண்ணா. அதற்குப் பிறகு பொறுப்பேற்ற கலைஞர் மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். அதன் பிறகு சமூக நீதிக்காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது மே 1 அன்று தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்கும் தொழிலாளர் தினமாக விடுமுறையை அறிவித்து ஊதியத்தோடு அந்த விடுமுறையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதையும் நிறைவேற்றித்தர கலைஞர் பாடுபட்டார் என்பது நன்றாக தெரியும். மே தின பூங்காவையும் உருவாக்கி தந்தவர் கலைஞர் தான். பூங்காவை மட்டுமல்ல அதன் உள்ளே அமைந்திருக்கக்கூடிய நினைவு சின்னத்தை ஏற்படுத்தி தந்தவரும் கலைஞர் தான். திமுக ஆட்சியின் மூலமாக இந்த 4 ஆண்டுகளில் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில், திமுக ஆட்சி அமைத்து நான்காவது ஆண்டை நிறைவு செய்து, 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு தொழிலாளர்கள் உறுதுணையாக - பக்கபலமாக இருக்க வேண்டும்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.