tamilnadu

பணி மேம்பாட்டுக்கான பணப் பலன்களை வழங்கிடுக! பேராசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் வலியுறுத்தல்

பணி மேம்பாட்டுக்கான  பணப் பலன்களை வழங்கிடுக!  பேராசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி  முகாமில் வலியுறுத்தல் 

மயிலாடுதுறை, செப். 28-  மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில், கல்லூரி பேராசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.  சென்னை, ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பேராசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர். தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர்.கோகுல கிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் தலைவர் பேராசிரியர் காந்திராஜ் முகாமிற்கு தலைமை ஏற்று உரையாற்றினார். பயிற்சி முகாம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் முனைவர். சேவியர் செல்வகுமார் உரையாற்றினார். முகாமை துவக்கி வைத்து த.பே.மா.லு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார் உரையாற்றினார். தொழில்நுட்ப முதல் அமர்விற்கு சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் கிருஷ்ணராஜ் தலைமை வசித்தார். “பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அரசியலமைப்பு கட்டமைப்பு கொள்கைகள்” என்ற தலைப்பில் முன்னாள் தலைவர் முனைவர் ரவிச்சந்திரன், “கூட்டமைப்பு போராட்டங்கள், சாதனைகள்’’ என்ற தலைப்பில்  திருச்சி மண்டல முன்னாள் தலைவர் முனைவர்.பெலிசியா ஜெயக்குமார்,  “தனியார் கல்லூரிகளின் ஒழுங்குமுறை சட்டம், 1976’’ பற்றி முன்னாள் தேசியச் செயலாளரும், முன்னாள் தலைவருமான முனைவர் ஜெயகாந்தி ஆகியோர் பயிற்சியளித்து உரையாற்றினர்.  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது தொழில்நுட்ப அமர்வுக்கு பொருளாளர் முனைவர்.சார்லஸ் தலைமை வகித்தார். “பிற இயக்கங்களைக் கண்காணித்தல் மைல்கற்கள் மற்றும் பங்களிப்புகள்’’ என்ற தலைப்பில் முன்னாள் தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர் நெடுஞ்செழியன், “பல்கலைக்கழக செயல்திறனை வலுப்படுத்துவதில் ஆசிரியர் சங்கங்களின் பங்கு’’ என்ற தலைப்பில் தஞ்சாவூர் மண்டலச் செயலாளர் முனைவர். சொக்கலிங்கம் ஆகியோர் பயிற்சியளித்து உரையாற்றினர்.  முகாமை தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் சேவியர் செல்வக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, “அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டுக்கான பணப்பலன்கள், எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எந்தவித நடவடிக்கையும் இல்லையென்றும், விரைவில் செயற்குழு கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்கும் என்றும் கூறினார்.  தஞ்சை மண்டலச் செயலாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.