மதுரையில் இன்று (29.08.24) நடைபெற்ற 6ஆவது ஆண்டு கல்விக்கடன் முகாமில் ரூ.21.92 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 6ஆவது ஆண்டு கல்விக் கடன் மேளா சிறப்பு முகாம் டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்றது. முகாமை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில் சுமார் ரூ.21.92 கோடி கல்விக் கடனாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இம்முகாமில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் துக்காராம் நாயக், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் முனைவர். பியுலா ஜெயஶ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இச்சிறப்பு கல்விக் கடன் முகாம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதுரை மாவட்டத்தில் 6 வது ஆண்டாக கல்விக்கடன் முகாம் டோக் பெருமாட்டி கல்லூரியில் இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முகாமை குத்துவிளக்கேற்றி அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்தார். இன்று ஒரே நாளில் 21.92 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களில் ஒரே நாளில் வழங்கப்பட்ட அதிகபட்சத் தொகை இது.
கல்விக்கடன் கட்ட இயலாமல் உயர்கல்வி வாய்ப்பினை தவற விடும் ஒரு மாணவர் கூட மதுரையில் இல்லை என்கிற நிலை உருவாக தொடர்ந்து உழைக்கிற அனைவருக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.