பூலாம்பாடி பேரூராட்சி மன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவை சேர்ந்த 12 உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த இரண்டும் உறுப்பினர்களும், ஒரு சுயேட்சை உறுப்பினர் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த பாக்கியலெட்சுமி இருந்து வருகிறார். பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சரியான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 7 ஆவது வார்டு, திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரும், துணைத் தலைவருமான செல்வலட்சுமி வேண்டுமென்றே தனது வார்டு பகுதிக்கு அடிப்படை வசதி செய்துதரவில்லை எனக் கூறி பிரச்சனை செய்து வருகிறார். இவரது செயல்பாடு பேரூராட்சி மன்ற செயல்பாட்டுக்கும், திமுகவிற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது எனக் கூறி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வலட்சுமியை கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.