tamilnadu

மேல்முறையீட்டில் ரத்தாகும் தூக்குத் தண்டனைகள்!

மேல்முறையீட்டில் ரத்தாகும் தூக்குத் தண்டனைகள்!
தமிழ்நாட்டில் விசாரணை நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட பெரும்பாலான தூக்குத் தண்டனைகள் மேல்முறையீட்டில் ரத்து செய்யப்படுவதாக புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ‘தி ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக்’ வெளியிட்டுள்ள “இந்தியாவில் மரண தண்டனை: ஆண்டு புள்ளிவிவர அறிக்கை 2025” என்ற ஆய்வறிக்கை, கடந்த 2025-ஆம் ஆண்டில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளை விரிவாக ஆராய்ந்துள்ளது.  விசாரணை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் கடந்த பத்தாண்டுகளில் அந்த வழக்குகளின் போக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், விசாரணை நீதிமன்றங்கள் அளிக்கும் தண்டனைக்கும் மேல்முறையீட்டு காலத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வழங்கப்படும் தீர்ப்புக்கும் இடையே ஆழமான இடைவெளி இருப்பது ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு தூக்கு தண்டனை வழக்குகளை விசாரித்த போது, ஒரே ஒரு தீர்ப்பை மட்டுமே உறுதி செய்துள்ளது. அதே வேளையில் 5 வழக்குகளில் 8 பேரின் தூக்குத் தண்டனைகளைக் குறைத்துள்ளது. விசாரணை நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட பல தூக்கு தண்டனைகள் உறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது. உயர் நீதிமன்றம் உறுதி செய்த ஒரே தூக்குத் தண்டனை, திருநெல்வேலியில் 2022-ஆம் ஆண்டு ஆர். வைகுண்டம் என்பவரின் கொலை வழக்குடன் தொடர்புடையதாகும். 2016-ஆம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கில் சாட்சியமளித்த வைகுண்டத்தை ஆர். செல்வராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் பழிவாங்கும் விதமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடுகளின்போது, விசாரணை மற்றும் விசாரணை நிலைகளில் இருந்த குறைபாடுகளைக் கண்டறிந்து உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பில் தலையிடுகின்றன. பலவீனமான சாட்சிகள், ஆதாரங்களின் குறைபாடுகள் ஆகியவை இதில் அடங்கும். விசாரணை நீதிமன்றங்கள் கடுமையான சமூக மற்றும் பொது அழுத்தத்தின் கீழ் செயல்படுகின்றன என்று மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் வழக்குரைஞர் வி. சுரேஷ் கூறுகிறார். தண்டனைக்கான தனி விசாரணையை நடத்தி, தனிப்பட்ட சூழ்நிலை, மன ஆரோக்கியம், திருந்தும் வாய்ப்புகளுக்கான சாத்தியக் கூறுகளை மதிப்பீடு செய்த பிறகே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் அல்லது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை வலியுறுத்தியுள்ளது. தேசிய அளவில், விசாரணை நீதிமன்றங்கள் 2025ஆம் ஆண்டில் 94 வழக்குகளில் 128 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளன. இவர்களில் 10 பெண்களும் அடங்குவர். அதில் 5 வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. பெரும்பாலான தூக்குத் தண்டனைகள் பின்னர் மேல்முறையீட்டில் மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.