தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவு
கருணை அடிப்படை பணி நியமனம்
சென்னை, ஜூன் 20- அரசுப் பணியில் இருப்பவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்த வழக்கை 2023 ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கருணை அடிப்படை பணி நியமனத்துக்கான நடைமுறை சிக்கல்களை களைவதற்கும், இதற்கு கால நிர்ணயம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற நிலையில், நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்துக் கொண்டது. நீதிபதி பட்டு தேவானந்த், 2023 முதல் தற்போது வரை தலைமை செயலாளர்களாக இருந்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா ஆகியோர் ஜூலை 21 அன்று நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.