சென்னை,அக்.25- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு: 2024-25 ஆம் கல்வியாண்டில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க மருத்துவக் கல்வி இயக்குநர் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மருத்துவக் கல்லூரிக்கல்வி இயக்குநரின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்த அரசு, 8 சான்றிதழ் படிப்புகள், 2 டிப்ளமோ படிப்புகள், 1 பட்ட படிப்பு என 11 துணை மருத்துவப் படிப்புகளை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. சான்றிதழ் படிப்பு ஒன்றுக்கு 20 இடங்களும், டிப்ளமோ 20, பட்ட படிப்பு 5 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன. அரசின் இந்த அனுமதியை தொடர்ந்து மருத்துவ கல்லூரி கல்வி இயக்குநர் தேவையான நடவடிக்கைகளை தொடங்க அறிவுறுத்தப்படுகிறது.