tamilnadu

img

ரயில்வேயைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்து கறுப்பு தினம்

பெங்களூரு, செப். 26-

ரயில்வேயைப் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்த்திட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வரும் அக்டோபர் 4 அன்று கறுப்பு தினம் அனுசரித்திடுவது என்று அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் தீர்மானித்துள்ளது.

அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷனின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் பெங்களூருவில் செப்டம்பர் 24, 25 தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களிலிருந்தும் 120 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் ஓடும் ரயில்வே தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய அரசாங்கம் ரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்திட துடித்துக்கொண்டிருப்பது குறித்தும், முதல் கட்டமாகத் தற்போது சில ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைத்திருப்பது குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

இந்திய ரயில்வே இதுநாள்வரையிலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் மலிவான போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் 2 கோடி பயணிகளை நாட்டில் இது சுமந்துகொண்டு, போய்க்கொண்டும், வந்து கொண்டுமிருக்கிறது. இந்திய ரயில்வேதான் இன்றுவரையிலும் உலகில் ஒரே நிர்வாகத்தின் கீழ், அதாவது இந்திய அரசின் நிர்வாகத்தின்கீழ், இயங்கிவரும் மிகப்பெரிய ரயில்வே போக்குவரத்து அமைப்பாகும். ஆனால் இதனை மாற்றியமைத்திட பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் தீர்மானித்திருப்பதுபோல் தோன்றுகிறது. இதனை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்திடும் திசைவழியில் திட்டங்களைச் செயல்படுத்திட முடிவு செய்திருக்கிறது.  இதற்காக 100 நாள் நடவடிக்கை திட்டம் ஒன்றையும் மத்திய ரயில்வே அமைச்சகம் வகுத்திருக்கிறது. 2019 ஆகஸ்ட் 31க்குள் இதனை அமல்படுத்திடும் விதத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தன்னுடைய ஜூன் 18 தேதியிட்ட கடிதத்தில் ரயில்வே வாரியம் கட்டளை பிறப்பித்திருக்கிறது.

இதனை, அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது. இதனைத் தடுத்துநிறுத்திட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்குவது என்றும் முடிவு செய்துள்ளது. ரயில்வேயில் இயங்குகின்ற அத்தனை தொழிலாளர்கள் சங்கமும், ரயில்வேயைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதிலிருந்து மத்திய  அரசைத் தடுத்து நிறுத்திடவும் ரயில்வேயைப் பாதுகாத்திடவும், ஒன்றுபட்டுப் போராட, முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன், கீழ்க்கண்டமுறையில் போராட்டத்திட்டங்களை அறிவித்துள்ளது.

·தனியாருக்குத் தாரைவார்ப்பதன் முதல்கட்டமாக தேஜாஸ் ரயில்களை ஐஆர்சிடிசி மூலம் இயக்கிட முடிவுசெய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் அக்டோபர் 4 அன்று கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

·தென்கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு ரயில்வே ஆகியவை வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை சித்தரஞ்சன் லோகோமோடிவ் வொர்க்ஸ் தொழிலகத்திலிருந்து, ஹவுரா நோக்கி நடைபயணம்  மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் தார்மீக ஒருமைப்பாட்டைத் தெரிவித்து, வரும் நவம்பர் 28 அன்று தார்மீக ஒருமைப்பாடு தினம் (Solidarity Day) அனுசரித்திடவும் முடிவு செய்துள்ளது. இந்நடைபயணத்தில் அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் அமைப்பின்சார்பில் 25 தோழர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் இவ்வியக்கத்திற்கு அனைத்துவிதமான ஆதரவினையும், பிரச்சாரத்தையும் செய்வதெனவும் முடிவு செய்துள்ளது. சகோதர சங்கங்களுடன் இணைந்து அனைத்து மையங்களிலும் கூட்டு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

·கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக் கூட்டங்கள் நடத்திடவும், புதுதில்லியில் தேசிய அளவிலான சிறப்பு மாநாடு நடத்திடவும் இம்மாநாட்டிற்கு சகோதர சங்கங்களின் பிரதிநிதிகளையும் அறிவுஜீவிகளையும் அழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

(ந.நி