உத்திரமேரூர், மார்ச் 9- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து எல்.எண்டத்தூர் வழியாக மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள அகரம்தூளி கிராமத்தில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால விஷ்ணு-துர்க்கை சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவருமான சு.பாலாஜி தலைமையில் வேணு, அரசு ஆகியோர் இணைந்து அகரம்தூளி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த ஊர் சிவன் கோயில் அருகில் எட்டாம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சார்ந்த விஷ்ணு துர்க்கை சிலையை கண்டறிந்தனர். மேலும், அந்த ஊரில் சமணர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றாக நைனார் குளம் என்னும் பெயரில் ஒரு குளம் உள்ளதையும் அதில் இருக்கும் நீரை சிலர் இன்றைக்கும் குடிநீராக பயன்படுத்தி வருதையும் கண்டுபிடித்தனர். இது குறித்து சு. பாலாஜி கூறுகையில்,“ எங்களது கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற விஷ்ணு-துர்க்கை சிலையின் உயரம் மூன்றறை அடியும் அகலம் இரண்டறை அடியும் கொண்டதாக உள்ளது. தலையில் பல்லவர் கால சிகை அலங்காரமும் காதில் கம்மல்கள் கழுத்தில் அணிகலன்களுடன் எட்டு கரங்களில் காணப்படுகிறது” என்றார். வலப்புறத்தில் உள்ள நான்கு கரங்களில் முதல் கரத்தில் சங்கும் இரண்டாம் கரத்தில் அம்பும் மூன்றாவது கரத்தில் கைப்பிடியுடன் கூடிய வாளும் நான்காவது கரத்தை இடுப்பின் மீது ஒய்யாரமாக வைத்த நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். இச்சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான மார்க்சிய காந்தி,“இது விஷ்ணு துர்க்கை சிலை என்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிலை என்றும் உறுதி செய்தார்கள். சிவன் கோவில் அருகில் பராமரிப்பின்றி இருக்கும் பல்லவர் கால விஷ்ணு துர்க்கை சிலையை தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி வரலாற்று ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது” என்றார்.