tamilnadu

img

அறிவிப்பின்றி பணி நீக்கம் இளம் தொழிலாளி தற்கொலை 

 செங்கல்பட்டு, செப். 14- காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த போந்தூர் கிராமத்தில் கொரிய நிறுவனமான ஜிண்டெக் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இத்தொழிற்சாலையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில் பணி செய்து வந்த காஞ்சிபுரம் கேஎஸ்பி நகரை சேர்ந்த தொழிலாளி சத்யாவை, (வயது 29) தொழிற்சாலை நிர்வாகம் எந்தவித விசாரணையுமின்றி பணிநீக்கம் செய்தது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சத்யா வெள்ளியன்று (செப்.13) தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவலர்கள் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு சென்றனர். தகவலறிந்து சக தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பிணவறை முன் திரண்டனர் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நடந்தவற்றை கேட்டறிந்தனர். மேலும் சத்யாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.  இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு மறியலை தொடர்ந்து சனிக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சத்யாவின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு தொகை தருவதாக நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து அவரது சடலத்தை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். சத்யா உடலுக்கு சிஐடியு தலைவர்களும் தொழிலாளர்களும் அஞ்சலி செலுத்தினர்.