கடலூர் மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 5 ஆயிரம் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் அரசின் கட்டுப்பாட்டுத் தளர்வினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆதி மனிதனின் முதல் கண்டுப்பிடிப்பான சக்கரத்திலிருந்து மனிதனின் வாழ்க்கை நகரத் துவங்கியது. மாட்டினை பழக்கப்படுத்தி வண்டி இழுக்க ஆரம்பித்த சமூகம் படிப்படியாக முன்னேறி இயந்திரமயமான போதிலும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவுகளை நனவாக்கி வருவதிலும், வேளாண்மைத் தொழிலில் குறுகிய தூர போக்குவரத்திற்கும் மாட்டு வண்டிகளே பெரும் பங்காற்றி வருகிறது. ஊரக பகுதியில் குறிப்பிட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும் மாட்டு வண்டித் தொழில் இருந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஆறுகளில் அமைக்கப்பட்ட மணல் குவாரிகளிலிருந்து வீடுகளுக்கு ஆற்று மணல் ஏற்றிச் சென்று அதில் கிடைக்கும் வருவாயில் தனது குடும்பத்தையும், மாடுகளையும் பராமரித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவால் மாட்டு வண்டிக்கான மணல் குவாரிகள் முற்றிலுமாக மூடப்பட்டன. மணல் குவாரிகளுக்கு மாவட்ட அளவில் அனுமதி வழங்க இருந்த அதிகாரம், மாநில அளவிலான கமிட்டிக்கு மாற்றப்பட்டது. இதனால், கடலூர் மாவட்டத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. இதனால் இத்தொழிலை நம்பியிருந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மீண்டும் மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். மணல் எடுக்க அனுமதி இல்லாத்தால் ஊரகப் பகுதிகளில் சிறியது முதல் பெரிய அளவில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நசிவு காரணமாகவும், போதிய வருமானம் இல்லாமல் மாடுகளை பராமரிக்க முடியாமலும் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது மாட்டு வண்டிகளை குறைந்த விலைக்கும், மாடுகளை கறிக்காகவும் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், சிலர் எப்படியாவது மீண்டும் மாட்டு வண்டித் தொழில் துவங்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கையில் அவர்களுக்கு கொரோனா பரவல் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதோடு, அவர்கள் சமீப காலமாக சென்று வந்த கூலித் தொழிலும் தற்போது நடைபெறவில்லை.
இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன் கூறுகையில், நசிந்து கொண்டிருக்கும் மாட்டு வண்டித் தொழிலை உயிர்பிக்கவும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களை பாதுகாக்கவும் மாட்டு வண்டி மணல்குவாரிகளை விரைந்து திறக்க வேண்டும். கொரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ 10 ஆயிரமும், 3 மாதங்களுக்குரிய அரிசி, மளிகை பொருட்களையும் வழங்க வேண்டும். மாட்டு வண்டி மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, முடங்கிக் கிடக்கும் கட்டுமானத்தொழில் புத்துயிர் பெறும். இதன் மூலம் ஒரு லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் என்றார். சிஐடியு மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திருமுருகன் கூறுகையில், மீண்டும் மாட்டு வண்டி தொழில் செய்வதற்கு ஏதுவாக மானிய உதவியுடன் தொழிலாளர்களுக்கு தலா ரூ 2 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும்.
காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து மாட்டு வண்டிகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும். மாடுகளை பராமரிக்க தினசரி ரூ 500 க்கு மேல் செலவாகின்றது. மாடுகளுக்கான தீவனத்தை அரசே வழங்க வேண்டும், மனித நேயத்துடன் இவற்றையெல்லாம் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும் என்றார். சிஐடியு சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக கடலூர் வட்டத்தில் வானமதேவி, வான்பாக்கம், பண்ருட்டியில் எலந்தம்பட்டு, காமாட்சிபேட்டை, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் அம்புஜவல்லிபேட்டை, கூடலையாத்தூர், வேப்பூர் வட்டத்தில் ஆதியூர், சிதம்பரம் வட்டத்தில் கிளியனூர், புவனகிரி வட்டத்தில் ஆதனூர் , விருத்தாசலம் வட்டத்தில் சொத்திக்குப்பம், பூந்தோட்டம், திட்டக்குடி வட்டத்தில் இடைச்செருவாய் ஆகிய இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சியா கமிட்டி அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சியா கமிட்டி மூலம் மாட்டு வண்டி மணல் குவாரிகளுக்கு அனுமதி பெறுவதில் மெத்தனம் காட்டி வருவதால் மாட்டு வண்டித் தொழில் கடலூர் மாவட்டத்தில் முடங்கி வருகிறது.. -வ.சிவபாலன்