tamilnadu

img

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை - 2019: 2016 – 2018 இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது?

2016 – 2018 இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது?

2015 அக்டோபர் 31 அன்று சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழு 2016 மே 27 அன்று தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனாலும் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது. பின்னர் தவிர்க்கவியலாத காரணங்களால் மத்திய அமைச்சகத்தின் ஆவணமாக அந்த அறிக்கை (?) சுருக்கி வெளியிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்புகள் அரசு அதிகார மையங்களுக்குள் ஊடுருவி செயல்படத் துவங்கின. அதிகாரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துவதில் அவர்கள் தவறுவதே இல்லை. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின் கீழ் அதன் துணை அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின்ற 11 கல்வி சார்ந்த் அமைப்புகள் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். இந்த புதிய கல்விக் கொள்கை விவகாரத்திலும் தலை கொடுத்த ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டன என்பது குறித்து ”நீளும் காவிக் கரங்கள்: அரசின் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் மாற்றியமைத்து வருகின்றன” என்ற தலைப்பில் இந்தியா டுடே பத்திரிக்கையில் கட்டுரையொன்று வெளியானது.

சாதித்துக் கொண்ட ஏபிவிபி, சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ், சமஸ்கிருத பாரதி

அரசின் பல்வேறு துறைகளுக்குள்ளும் தலையிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை இந்த அமைப்புகள் நிலை நிறுத்திக் கொண்ட விதம் குறித்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் கல்வித்துறை சார்ந்த பகுதியில், “சுனில் அம்பேகர் தேசிய அமைப்புச் செயலாளராகச் செயல்பட்டு வரும் ஏபிவிபி அமைப்பு 2016ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட சுப்பிரமணியன் குழு அறிக்கையை நிறுத்தி வைத்தது. அதிகார மையத்திற்குள் வலைய வந்து கொண்டிருக்கும் அம்பேகரின் செயல்பாடுகளால், கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக் குழு அமைக்கப்பட்டது. கல்வி உரிமைச் சட்டத்தை மீளாய்வு செய்தல், மாநிலங்கள் அளவில் கல்வியை ஒழுங்குபடுத்துகின்ற அமைப்புகளை உருவாக்குதல் போன்ற விஷயங்களை ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்ந்த அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இவ்வாறான ஒழுங்குமுறை அமைப்புகள் விமானம் மற்றும் தொலை தொடர்புத் துறைகளில் தனியார் நுழைவதை ஊக்கப்படுத்தி சிறந்த சேவைகள் மற்றும் குறைந்த கட்டணத்தை உறுதிப்படுத்தி இருப்பதால், கல்வி வணிகமயமாவதைத் தடுக்கும் வகையில் மாநில அளவிலான ஒழுங்குமுறை அமைப்புகள் நிறுவப்பட வேண்டுமென்பதை அம்பேகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ் அமைப்பைச் சார்ந்த அதுல் கோத்தாரி, தியாநாத் பத்ரா ஆகியோர் 2014இல் மோடி அரசாங்கம் பதவியேற்றுக் கொண்ட பிறகு சிசாட், யுபிஎஸ்சி தேர்வுகளில் இருந்த குறைபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று கோரி அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டனர். 

சமஸ்கிருத மீட்டுருவாக்கம் என்பது சங் திட்டத்திற்குள் தொடர்ந்து இருந்து வருகின்ற திட்டமாகும். சமஸ்கிருத இலக்கியங்களுக்குள் இருக்கின்ற அறிவியல், தொழில்நுட்பங்களை சமஸ்கிருதம் மற்றும் நவீன பாடங்களுடன் இணைத்து தர வேண்டும் என்று சமஸ்கிருத பாரதி போன்ற அமைப்புகள் கோரியதன் விளைவாக, தேர்வு செய்து கொள்கின்ற மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2016ஆம் ஆண்டு அனைத்து ஐஐடி, ஐஐஎம்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.  ஐஐடி-கான்பூரில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்து மதம் தொடர்பான பாடங்கள் தொடர்பான ஒலிச் சேவைகள் தயாரிக்கப்பட்டு 2018 ஜனவரியில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றன” என்று கல்வித்துறை மீதான ஆர்எஸ்எஸ் அமைப்புகளின்  ஆதிக்கம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.  

நேரடியாகத் தரப்பட்ட அழுத்தம்

கல்வித் துறையில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் தரப்பட்ட சில அழுத்தங்கள் மட்டுமே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் கல்விக் கொள்கைகளையே தடுத்து நிறுத்துகின்ற விதத்தில் ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்புகள் இவ்வாறு அமைச்சகத்திற்கு கொடுத்த நெருக்கடிகளின் விளைவாக, அரசாங்கத்தின் கொள்கை வடிவாக்கச் செயல்பாடுகளின் வேகம் தணிந்தது.  2016 ஜுலை 6 அன்று பதவியேற்றுக் கொண்ட இரு வாரங்களுக்குள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள், அதன் துணை அமைப்புகளின் தலைவர்களை ஜவடேகர் சந்தித்தார். பாரதிய சிக்‌ஷன் மண்டல் அமைப்புச் செயலாளர் முகுல் கனிட்கர், பாரத் நிதி அமைப்பின் தலைவரும் பாஜக பொதுச் செயலாளருமான முரளிதர் ராவ் இருவரும் இணைந்து சென்று அமைச்சரைச் சந்தித்து புதிய கல்விக் கொள்கை தேசியவாதத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தனர். இந்த இரு அமைப்புகள் தவிர வேறு எந்த அமைப்புகள் வந்தாலும் தான் சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜவடேகர் தெரிவித்தார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம், 2016 புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக பாரதிய சிக்‌ஷன் மண்டல் ஏற்பாடு செய்திருந்த கூட்டமாகவே இருந்தது. அவருக்கு முந்தைய அமைச்சரான ஸ்மிருதி இரானியின் மீது இந்த அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து கொடுத்து வந்த அழுத்தங்கள் ஜவடேகரின் மீதும் இருக்கப் போவதையே இத்தகைய சந்திப்புகளும், கூட்டங்களும் உறுதிப்படுத்தின.  

சுப்பிரமணியம் குழு அறிக்கை. . .?

இந்த அமைப்புகள் தந்த அழுத்தத்தால் சுப்பிரமணியன் குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று சொல்லும் நிலையை நோக்கி ஜவடேகர் தள்ளப்பட்டார். மனிதவள மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஜவடேகர் அளித்திருந்த நேர்காணலில் ”புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்காக பெறப்பட்ட உள்ளீடுகளில் ஒன்றாகவே சுப்பிரமணியன் குழுவின் அறிக்கை கருதப்படுகிறது. 1986ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட கல்விக் கொள்கைக்குப் பிறகு, ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாக்கப்படப் போகின்ற இந்த கல்விக் கொள்கை இந்த சமூகத்தின் அனைத்துப் பகுதியினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவேதான் 18 மாதங்களாக ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறோம். கடிதங்கள் மூலமாக மட்டுமே ஏறத்தாழ பத்து லட்சம் பக்கங்களுக்கு மேலான கருத்துக்கள் வரப் பெற்றிருக்கிறோம். இவையனைத்தும் மதிப்பிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்” என்று சுப்பிரமணியன் குழு அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். சுப்பிரமணியன் குழு அறிக்கை குறிப்பிட்ட யாரையோ திருப்திப்படுத்தவில்லை என்ற தொனி ஜவடேகரின் வார்த்தைகளில் நிரம்பியிருந்தது.  

ஜவடேகரின் அந்தக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் 2016 அக்டோபர் 16 அன்று அளித்த நேர்காணலில், “அமைச்சகத்தால் பெறப்பட்டிருந்த ஆலோசனைகள் 2015 அக்டோபரில் எங்களிடம் தரப்பட்டன. நாங்கள் அவற்றில் சிலவற்றை எங்களுடைய அறிக்கையில் இருக்கின்ற சில பரிந்துரைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டோம்” என்றார். கல்விக் கொள்கைகள் குறித்த அறைக்கை சமர்பிக்கப்பட்ட பிறகும், அது தொடர்பான ஆலோசனைகள் இன்னும் தொடர்வது குறித்து அவர் வருத்தமடைந்திருந்தார்.

சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்திருந்த தாராளமயம், தன்னாட்சி ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு, பாடத்திட்டங்கள் தயாரிப்பு, கல்வி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவது போன்ற விஷயங்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதையே ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகள் விரும்பின. பரவலான ஆலோசனைகளைப் பெற்றதே குழு அறிக்கையை அவர்கள் நிராகரிப்பதற்கான காரணமாக இருந்தது என்பது அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து தெரிய வந்தது. ஒருகட்டத்தில், சுப்பிரமணியன் குழு அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதனை நீர்த்துப் போகச் செய்வது அல்லது சில பரிந்துரைகளை மட்டும் ஏற்றுக் கொள்வது என்பதே பாஜக/ஆர்எஸ்எஸ் கொண்டிருந்த தந்திரமாக இருந்தது. 

ஆனால் ஜவடேகர் அளித்த அந்த நேர்காணல் சுப்பிரமணியன் குழுவின் அறிக்கையை அவர்கள் நிராகரிக்கப் போகிறார்கள் என்பதைக் காட்டிக் கொடுத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையை அந்த நேர்காணலின் போது ஜவடேகர் முற்றிலுமாக நிராகரித்தார். தேசிய அளவில் கல்விக்கான செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவிகிதம் இருப்பதாகவும், பட்ஜெட் தொகையில் 15 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்படுவதாகவும், பாஜக ஆளுகின்ற மாநில அரசுகளும் அதிக தொகையை கல்விக்காகச் செலவிட்டு வருவதாகவும் கூறிய ஜவடேகர் ”இங்கே நிதிப் பற்றாக்குறை பிரச்சனையாக இருக்கவில்லை. செலவு செய்வதில் இருக்கின்ற ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பது, வீண் செலவுகளைத் தவிர்ப்பது போன்றவையே முக்கியமானவையாக இருக்கின்றன” என்று அந்த நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். ஆனால் “எங்களுடைய அறிக்கையில் நான்கு வயதிலிருந்தே இலவச, கட்டாயக் கல்வி மாநில அரசுகளால் வழங்கப்பட வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான பரிந்துரையை அளித்திருக்கிறோம். இதனை அமல்படுத்துவதற்கு 6 சதவிகிதத்திற்கும் அதிகமான நிதி கட்டாயம் தேவைப்படுவதாக இருக்கும்” என்று பதிலளித்ததன் மூலம் ஜவடேகரின் இந்தக் கருத்தையும் சுப்பிரமணியன் நிராகரித்தார்.  

நிராகரிக்கப்பட்ட சுப்பிரமணியன் குழு அறிக்கை

ஆக ஜவடேகர் பதவியேற்றுக் கொண்ட மிகச் சில நாட்களிலேயே புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவதற்கான தகுதியை சுப்பிரமணியன் குழு அறிக்கை முற்றிலுமாக இழந்து விட்டது. தங்களுடைய திட்டங்களை நிறைவேற்றித் தராத சுப்பிரமணியன் குழு மீது ஆத்திரம் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பின்னணியில் நின்று அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கச் செய்து விட்டன. ஆனாலும் தங்களது முயற்சியைத் தளர விடாது, தாங்கள் நிராகரித்த அந்த அறிக்கைக்குப் பதிலாக, வேறொரு அறிக்கையைக் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டு செயலாற்றத் தொடங்கினர்.  2016 ஜுலை 6 அன்று பதவியேற்றுக் கொண்ட ஜவடேகர் 2017 ஜுன் 24 அன்று கஸ்தூரிரங்கன் குழுவை அமைக்கும் வரை இருந்த ஓராண்டு காலமும் அவர்கள் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பில் கல்வி குறித்த கருத்தரங்களை நடத்தி தங்களுடைய கருத்துக்களான ஆதரவைத் திரட்டி வந்தனர். பண்டைய வேதகால இந்தியா, புராணங்களில் உள்ள அறிவியல், குருகுலக் கல்வி, தாய்மொழிக் கல்வி, சமஸ்கிருதம் ஆகியவற்றை மையப்படுத்தி  தங்களுடைய கருத்து திணிப்பு வேலைகளைத் திறம்பட நடத்தினர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரடியாக கல்விக் கொள்கை குறித்து பேச ஆரம்பித்தார்.

அறிக்கையை ஏற்றுக் கொள்ளாத ஆர்எஸ்எஸ்

2016 அக்டோபர் 11 அன்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் மோகன் பகவத், “மத்தியில் புதிய அராசாங்கம் பதவியேற்றுக் கொண்ட பிறகு, கல்விக் கொள்கை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் அறிவுடன் இணைந்து போவதாக அந்த அறிக்கையில் இருக்கின்ற பரிந்துரைகள் இருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். பார்த்த பிறகுதான் கல்விக் கொள்கை பயணிக்க வேண்டிய திசை குறித்த சரியான திட்டங்களை வடிவமைக்க இயலும். அவ்வாறில்லை என்றால் அனைவரும் ஒத்துக் கொள்கின்ற கல்வித்திட்டம் எட்டாக்கனியாகவே இருக்கும்” என்று உரையாற்றினார். எங்களுடைய கல்வியாளர்களும் ,செயற்பாட்டாளர்களும் ஏற்றுக் கொள்ளாத எந்த புதிய கல்விக் கொள்கையையும்  நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், நாங்கள் ஏற்றுக் கொள்ளும் வரையிலும் கல்விக் கொள்கை யாருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கும் என்ற தொனியே அவரது பேச்சில் தொக்கி நின்றது.  

அக்டோபர் 11 மோகன் பகவத் ஆற்றிய விஜயதசமி உரையில்  புதிய கல்விக் கொள்கை பற்றி குறிப்பிட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி அக்டோபர் 26 அன்று சுப்பிரமணியனிடம்  கேட்கப்படுகிறது. ”அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என்றாலும் எங்களுடைய அறிக்கை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். அதில் நல்ல பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பதாகவே பலரும் கூறுகின்றனர். தற்போது நடைமுறையில் இருக்கின்ற கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே அவர் தெரிவித்திருப்பார். இந்த அமைப்பில் உள்ள குறைகளைப் பற்றி நாங்கள் தெரிவித்திருக்கிறோம். நல்ல நோக்கங்களைக் கொண்டுள்ள கல்வி உரிமைச் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதையும், நான்காம் வகுப்பு பாடங்களை அறிந்திராத நிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருக்கின்ற வகையில் கற்றல் தரங்கள் மிகவும் மோசமாகி, பள்ளிக் கல்வி அலங்கோலப்பட்டு கிடப்பது பற்றியும் நாங்கள் எங்களுடைய அறிக்கையில் கூறியிருக்கிறோம்.  எல்லாவற்றிற்கும் மேலாக செயல்திறன் குறைந்து கொண்டே வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 16 வயது வரையிலும் கல்வி பெறும் உரிமையை வழங்குகிறது. 67 சதவிகித மக்கள் வறுமையில் உழன்று வருகின்ற நிலைமையிலும், கிராமப்புறங்களில்கூட மக்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து விட்டு தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கிறார்கள். பொதுவாகப் பார்த்தால் இந்தியாவில் கல்வி மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. ஹார்வர்டுக்கும், ஐஐடிக்கும் செல்பவர்களைப் பார்த்து மக்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்த புரிதல் மக்களிடம் இல்லை.  கல்வியில் மிகப் பெருமளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதையே எங்களுடைய அறிக்கை வலியுறுத்துகிறது. அனைவரும் சமம் என்பதை சட்டம் அங்கீகரித்தாலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அதிக அளவில் இடைவெளிகள் இருப்பதைக் காண முடிகிறது. கல்வி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை. இந்த அமைப்பிற்கு பழக்கப்படாது, அதனுடன் தொடர்பற்று இருப்பவர்களை நாம் ஏற்றுக் கொண்டு அவர்களையும் உள்ளே கொண்டு வரும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை வர வேண்டும் என்று மோகன் பகவத் பேசியது இந்த அர்த்தத்திலேயே இருக்கலாம்” என்றார்.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அவருக்கு முன்பிருந்த ஸ்மிருதி இரானியின் காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மிகவும் நழுவலாக, “இந்த கேள்விக்கான பதிலை சற்றே வித்தியாசமாக கூற விரும்புகிறேன். தற்போது கல்வி குறித்த கவனக் குவிப்பு அமைச்சர்கள், செயலர்கள், வாரியங்கள் ஆகியோரின் மீதே இருக்கிறது. அது மாற வேண்டும். குழந்தைகள், ஆசிரியர்கள், பள்ளிகள், முதல்வர்கள் மீது நமது கவனம் குவிய வேண்டும். அதிகாரிகளைப் பெருமைப்படுத்துவதை விடுத்து குழந்தைகளைப் பெருமைப்படுத்த வேண்டும். வாய்ப்புகளைக் கொடுத்தால் அவர்கள் நிச்சயம் கற்றுக் கொள்வார்கள்” என்று கூறி முடித்துக் கொண்டார்.   

கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதில், பாஜக அரசின் பின்னணியில் இருந்து கொண்டு, அரசியல் அதிகார வட்டத்திற்குள் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தங்களை மறைமுகமாக தீவிரமாக ஈடுபடுத்தி வருவது இவ்வாறு அதிகரித்தது. 2017 மார்ச் மாதம் டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய மோகன் பகவத் ஆர்எஸ்எஸ்சில் உயர்கல்விக்கென்று தனியான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார். ஆர்எஸ்எஸ் அமைப்பு பல பள்ளிகளை நடத்தி வருகின்றது என்றாலும், உயர்கல்வி குறித்த அழைப்பு அப்போதுதான் அவர்களிடமிருந்து வெளியானது.

குருகுலக் கல்வி

2017 பிப்ரவரி 6 அன்று கற்பித்தல் என்பது இல்லாமல் கற்றல் மட்டுமே நடைபெறுகின்ற கல்வி முறையாக குருகுலக் கல்வி முறை இருக்கிறது என்று சன்ஸ்கிருத பாஷா பிரச்சாரினி சபா என்ற அமைப்பால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய பாரதிய சிக்‌ஷன் மண்டல் அமைப்பின் தேசிய செயலாளர் முகுல் கனிட்கர் கூறினார். குருகுல முறையானது ஒவ்வொரு மாணவரிடமும் ஆசிரியர் தன்னுடைய கவனத்தை தனிப்பட்ட முறையில் செலுத்தி அவர்களைக் கவனித்துக் கொள்ளும் வகையில் வீட்டுப்பள்ளி முறையாக இருக்கின்றது. இவ்வாறு தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த முடியாத மெக்காலே கல்வித் திட்டத்தில் மட்டுமே மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பது நடைபெற்று வருவதாகத் தெரிவித்த கனிட்கர் மெக்காலே கல்வித் திட்டம் திறனற்றதாக இருப்பதால் ’உண்மையான கல்வி’ மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார்.  அந்த நிகழ்ச்சியில் பேசிய லேனா ரஸ்தோகி, பத்து அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு ஆறில் வெற்றி கண்ட மருத்துவர் ஒருவரை 60 சதவிகிதம் திறனுடையவர் என்று ஏற்றுக் கொள்வது எவ்விதத்தில் சரியாக இருக்கும் என்று கேள்வியெழுப்பியதோடு, 100 சதவிகித திறனுள்ள மாணவர்களை குருகுலக் கல்வி முறையால் மட்டுமே உருவாக்க முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

ஏற்கனவே இதே போன்ற கருத்தையே 2016 விஜயதசமி விழாவில் உரையாற்றிய மோகன் பகவத் முன்வைத்திருந்தார். “புதிய தலைமுறைக்கான கல்வி என்பது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்து மட்டும் கிடைப்பதாக இருக்கவில்லை. சமூக நடவடிக்கைகள், சமூகத் திட்டங்கள், குடும்பங்கள், விழாக்கள் போன்ற முக்கியமான இடங்களில் இருந்தும் கல்வி கிடைக்கப் பெறுகின்றது. நமது குடும்பங்களில் மூத்த, இளைய தலைமுறையினருக்கிடையே தோழமை நிறைந்த உரையாடல்கள் நடப்பதில்லையா? சமூக பொறுப்புகள், தனிப்பட்ட மற்றும் தேசம் சார்ந்த குணங்கள், விழுமியங்களின் மீதான மரியாதை, வேலையின் மீது ஈடுபாடு, பற்று, மோசமான செயல்களின் மீதான கவர்ச்சியைத் தவிர்ப்பது என்று அவ்வாறான உரையாடல்கள் இளைய தலைமுறையினரிடம் பலவகைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லையா? மூத்த தலைமுறையினர் இளைய தலைமுறையினருக்கான முன்மாதிரிகளாகத் திகழ்வதில்லையா? இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் யாரிடமிருந்து நாம் விடைகளைப் பெறுவது? வீடுகளுக்குள் நல்ல விதத்தில் வளர்ந்து மிகச் சரியான நடத்தை குணங்களைப் பெற்றிருக்கின்ற குழந்தைகள், படிப்புகளை மேற்கொள்வதற்காக கடுமையாக உழைத்து அதனைச் சரியான முறையில் பயன்படுத்த முடிவதை நமது அனுபவங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. ரிஷிகள் வலியுறுத்திய இத்தகைய உரையாடல்கள் தொடர வேண்டும் என்பதை உணர்ந்திருக்கும் பல்வேறு நிறுவனங்கள் இப்போது அவற்றைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நமது சங்கத்தைப் பொறுத்த வரையிலும் அத்தகைய நடவடிக்கையாக இருக்கின்ற  ‘குடும்ப பிரபோதன்’ எனும் நடைமுறை சுயம்சேவக்குகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது”. பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் குடும்பங்களுக்குள்ளேயே கல்வி கற்கும் வகையிலான குருகுலக் கல்வி முறை பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகின்றனர்.    

குருகுலக் கல்வி மாநாடு

இத்தகைய கருத்துப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியாக, 2018 ஏப்ரல் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு மத்தியப்பிரதேச மாநில அரசு சார்பில், பண்டைய இந்தியாவின் கற்றல் முறையான குருகுல முறையை ஊக்குவிக்கின்ற வகையில், அதற்குத் தகுந்த கட்டமைப்பை உருவாக்குகின்ற நோக்கத்துடன் சர்வதேச குருகுல மாநாடு நடத்தப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், சத்யபால் சிங், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். 

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற அந்த குருகுல மாநாட்டில், நேபாள், மியான்மர், இந்தோனேசியா, மொரிசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும், ஆய்வு மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், 70 முதல் 80 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கலந்து கொண்டு நவீனக் கல்வி முறைக்குள் குருகுல முறையை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் தாங்கள் எதிர்பார்ப்பதாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தி ஒருங்கிணைத்து வருகின்ற பாரதிய சிக்‌ஷன் மண்டல் அமைப்பின் செயலாளர் முகுல் கனிட்கர் அப்போது அறிவித்திருந்தார். ”எத்தனை ஆசிரியர்கள், மாணவர்கள் இங்கே வருவார்கள் என்பது பிரச்சனை இல்லை. குருகுலங்களுக்கு தங்களுடைய பிள்ளைகளை அனுப்பி வைக்க தயங்குகின்ற பெற்றோர்களின் மனவோட்டம்தான் பிரச்சனையாக இருக்கின்றது” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த பையாஜி ஜோஷியும், ”மனிதன் உயிருடன் இயங்குகின்றவன், அவன் ஓர் இயந்திரமல்ல, நமது விழுமியங்களை உயர்த்தி பிடிப்பதற்கு நமது இலக்கியங்களை அவற்றின் மூலவடிவத்தில் அனைவரும் பயில வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த சுரேஷ் சோனியும் அந்த மாநாட்டில் பேசியதாக 2018 மே 11 அன்று வெளியான ஆர்கனைசர் பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகி இருந்தன.

”ஏற்கனவே நடந்து வருகின்ற குருகுலங்கள் இனிமேலும் அரசின் ஆதரவை நம்பி இருக்க வேண்டாம். தங்களுடைய குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாத கல்வி முறை குறித்து அதிருப்தி அடைந்திருக்கும் ஏராளமான பெற்றோர்கள் வீட்டுப்பள்ளி கல்வி முறையைக் கடைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர். தேவைப்படும் போது கல்வி முறை அவசியம் மாற்றப்பட வேண்டும். அறிவியலும் மாற்றத்திற்குரியதே. அப்போது நியூட்டனுக்கான சவால் ஐன்ஸ்டீனிடமிருந்து வந்தது. அண்மைக்கால கண்டுபிடிப்புகள் இப்போது ஐன்ஸ்டீனுக்கு சவால் விடுவதாக இருக்கின்றன. எது  எதைச் செய்ய வேண்டும், எது எதைச் செய்யக் கூடாது என்பதற்கான முழுமையான திட்டத்தை வடிவமையுங்கள். பெற்றோர்களின் மனவோட்டத்தை மாற்றுகின்ற வகையில் செயல்படத் துவங்குங்கள்” என்று குருகுல மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய மோகன் பகவத் கூறினார். உஜ்ஜயினியில் நடைபெற்ற இந்த சர்வதேச குருகுல மாநாட்டில் நடத்திக் காட்டப்பட்ட குருகுலங்களில் பயின்ற மாணவர்களின் சாதனைகள், பண்டைய இந்தியக் கல்வி முறையை நாம் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுவதாக ஆர்கனைசர் பத்திரிக்கை பெருமிதம் கொண்டது.

வேத காலக் கல்வி

அந்த குருகுல மாநாட்டில் கலந்து கொண்டு நமது பண்டைய வேத கால கல்வி முறையைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”நவீனக் கல்வி முறை தோல்வியுற்று, பல்வேறு குற்றங்கள் நிகழ்வதற்கு காரணாமாகி விட்டது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான முயற்சியில் பலரிடமிருந்தும் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறோம். இன்னும் மூன்று மாதங்களுக்குள்ளாக அந்த கொள்கை வரைவு தயாராகி விடும். அறிவியல் மற்றும் வானியல் துறைகளுக்கு பண்டைய இந்தியா அளித்திருக்கும் பங்கு குறித்த பாடங்கள் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். வேதகால, குருகுல கல்வி முறை குறித்து நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகின்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங், ”நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் முதல் ஐந்தாண்டுகளுக்கு குருகுல கல்வி பயில அனுப்பி வைக்கப்பட வேண்டும். வேதகால கல்வி முறையால் மட்டுமே நமது குழந்தைகளை நன்கு பராமரித்து அவர்களை மனவொழுக்கம் கொண்ட தேசபக்தர்களாக உருவாக்க முடியும். வேதக் கல்வி முறை மட்டுமே, இப்போதிருக்கின்ற கல்வி முறையை முழுமையானதாக மாற்றக் கூடிய வல்லமை கொண்டதாக இருக்கின்றது” என்றார். 

உளவியல்ரீதியான மாற்றங்களை மக்களிடம் ஏற்படுத்தி பழங்காலக் கல்விமுறையை அவர்களது குழந்தைகளிடம் கொண்டு போய் சேர்ப்பது, குருகுலக் கல்வி முறைக்குள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டு வந்து அவர்களை ஆக்கிரமித்துக் கொள்வது போன்ற கல்வி குறித்த திட்டங்கள் அவர்களால் இவ்வாறான கூட்டங்களில் வலியுறுத்திப் பேசப்பட்டன.

இவ்வாறெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்புகளும், தலைவர்களும் தொடர்ந்து பேசி வந்த போதிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளுக்கேற்றவாறு அரசாங்கத்தால் வார்த்தெடுக்கப்படும் கல்விக் கொள்கைகளை பாஜக அல்லாத மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வியும், ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கின்ற கல்வி குறித்த கொள்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்ற நிஜமும் இந்த வேதகால விற்பன்னர்களின் முன்னால் தொடர்ந்து நின்று உறுத்திக் கொண்டே இருக்கின்றன. 

(தொடரும்)

கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்.