ஐதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி. இவர் கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கடந்த புதனன்று மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த அவர், உடனடியாக ஒரு மருத்துரை பார்க்கும் பொருட்டு கச்சிபவுலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிறகு இரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட பிரியங்கா, ‘பைக் பஞ்சர் ஆகிவிட்டது. தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில்தான் இப்போது இருக்கிறேன். எனக்கு பதற்றமாக இருக்கிறது. நீ என்னுடன் பேசிக்கொண்டே இரு” எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது செல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. நீண்டநேரமாகியும் போன் ஆன் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவரின் குடும்பத்தினர் டோல்கேட் பகுதிக்கு விரைந்தனர். ஆனால் பிரியங்கா அங்கு இல்லை. இதுகுறித்து ஷாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது பிரியங்கா எனத் தெரியவந்தது. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.