tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் - கவிஞர் தமிழ் ஒளி

தமிழ் ஒளி புதுவையில் பிறந்த தமிழ்க் கவி ஆவார். மகாகவி பாரதியின் வழித் தோன்றலாகவும் பாரதி தாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது, கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல தளங்களில் திறம்பட இயங்கியவர். 

தாழ்த்தப்பட்ட மக்களின் இழி நிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி எண்ணற்ற கவிதைகளை எழுதினார் தமிழ் ஒளி. குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டுப் பெற்றவர் தமிழ் ஒளி. 

தமிழ் ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். 1949ஆம் ஆண்டில் ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்’ என்னும் கவிதை எழுதினார். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. ‘ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்’ என்று எழுதினார். ‘நிலை பெற்ற சிலை’, ‘வீராயி’, ‘மே தின ரோஜா’ ஆகிய மூன்று காவியங்களும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தலித் மக்களின் விடுதலை அவர்களின் முன்னேற்றம், உழைக்கும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றை விவரிக்கின்றன. ‘வீராயி’ என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தலித் பெண்ணாகக் காட்டப் படுகிறாள். 5 சிறுகதைத் தொகுதிகளை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் ஒளியின் ‘மேதினம்’ குறித்த படைப்பில்...

“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி கையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்கப் பொங்கிவந்த மேதினமே” 

என்னும் வரிகள் அர்த்த அடர்த்தி மிக்கவை.

தமிழ் ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், தலித்துகள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். ‘தாமரை’ இலக்கிய இதழில் ‘வனமலர்’ என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகளை எழுதினார். ஐம்பதுகளின் இறுதியில் தமிழ் ஒளி திரைப்படத்துறையில் கால் வைத்தார். ‘உலகம்’ என்னும் திரைப் படத்தில் ஒரு பாடலும் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்னும் திரைப்படத்தில் ஒரு பாடலும் எழுதினார். எவரெஸ்ட் மலை உச்சியில் தேசியக் கொடி ஏற்றி சாதனை படைத்த டன்சிங்கைப் பாராட்டிக் கவிதை எழுதினார். நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்தபோதும் கவிதை படைத்தார். சோவியத் யூனியன் ‘ஸ்புட்னிக்’ என்னும் விண் கலத்தை ஏவியபோது வரவேற்றும் அணுகுண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் கவிதைகள் எழுதி வரலாறு படைத்தார். குழந்தைகளுக்கான பாடல்களையும் நிறைய எழுதியுள்ளார். சக்தி நாடக சபாவுக்காக ‘சிற்பியின் காதல்’ என்னும் நாடகம் எழுதினார். அக்கதை ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக உருவானது.

அறிஞர் மு.வரதராசனார், எழுத்தாளர்கள் பூவண்ணன், விந்தன், ஜெயகாந்தன் போன்றோர் தமிழ் ஒளியைப் பாராட்டி யவர்கள். மா.சு.சம்பந்தம் தமிழ் ஒளியின் கவிதைகளை வெளியிட்டார். செ.து.சஞ்சீவி தமிழ் ஒளியின் கவிதைகளைத் திரட்டித் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

பெரணமல்லூர் சேகரன்

கவிஞர் தமிழ் ஒளி நினைவு நாள் 
(மார்ச் 24)