tamilnadu

img

கொரோனா அறிகுறி :  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 20 பேர் அனுமதி

தில்லியில் கடந்த மார்ச் மாதம் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஒரு அமைப்பின் சார்பில் சர்வதேச மாநாடு மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளை பகுதிகளை சேர்ந்த 82 பேர் இம்மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் ஆய்வு முடிவுகள் வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தில்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக சந்தேகிக்கப்படும் 31 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களது சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பாதிப்பு இவர்களுக்கு தொற்றியுள்ளதா என கண்டறிய ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பதினோரு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்ததையடுத்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இவர்கள் அவரவர் வீடுகளில் தங்களை தனிமை படுத்திக்கொண்டனரா என்பதை கண்காணிக்கும் பணி தொடர்கிறது. மீதமுள்ள இருபது பேரின் மருத்துவ முடிவுகள் இன்னமும் வராத நிலையில் இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட தனி வார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர். இவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை. 

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடிய இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கபட்டுள்ளனர். தில்லி சென்று திரும்பியவர்கள் யாரோடு தொடர்பில் இருந்தார்கள் பழகினார்கள் என்பதை கண்டறியும் பணியையும் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முழுவதும் தீயணைப்புத்துறையினர் உதவியோடு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் பொதுமக்கள் நலன் கருதி இதுவரை அரசு அறிவித்தபடி பகுதி நேரத்தில் இயங்கி வந்த மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகள் அனைத்தும் முழுமையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.