அந்த இளைஞரின் துல்லியமான ‘யார்க்கர்’, மிரட்டல் வேகம், ஆக்ரோஷமான பந்து வீச்சு, இவை அனைத்தையும் ஒருசேர பார்த்த ரசிகர்கள் கிரிக்கெட் உலகின் வேகப்பந்து அசுரன் என்று பெயரெடுத்த இலங்கையின் லசித் மலிங்காவை போன்று இருந்ததால் ‘மலிங்கா’ ‘மலிங்கா’ என எழுப்பிய உற்சாக குரல்களால் சேப்பாக்கம் மைதானமே அதிர்ந்தது. ஒரே நாளில் ஒட்டுமொத்த ரசிகர்களின் புருவங்களையும் உயர்த்தி தன் பக்கம் பார்க்க செய்தார்.
இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையை வீராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் கோட்டைவிட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்த நிலையில், தமிழ்நாட்டில் ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்துடன் தொடங்கிய 2019ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் (டிஎன்பிஎல்) விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லாமல் நடந்து முடிந்தது. இந்த முறை பா.சிவந்தி ஆதித்தன் உரிமையாளராக கொண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை வென்று மகுடம் சூடியது.
சூப்பர் கில்லி...
இறுதிகட்ட ஓவரில் மிரட்டல் வேகத்தில் திண்டுக்கல் அணி வீரர்களை சரித்த கிராமத்து வேக புயல் க.பெரியசாமியால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதால் ‘சூப்பர் ஹீரோவாக’ மாறினார். இந்த தொடரில் விளையாடிய 9 ஆட்டத்தில் தனது அசத்தலான பந்து வீச்சால் 21 விக்கெட்டுகளை அள்ளிய பெரியசாமி, இறுதி போட்டியில் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த இவருக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதும் கிடைத்தது.
சபாஷ்...
அறிமுக தொடரிலேயே நட்சத்திர பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கும் பெரியசாமிக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. டிஎன்பிஎல் தொடரில் 5 விக்கெட்டை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பெரியசாமி மிக விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. திண்டுக்கல் அணியை அடக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி கிரிக்கெட் உலகில் புதிய அவதாரம் எடுத்திருக்கும் பெரியசாமியை எவ்வளவு பாராட்டினாலும் அதற்கு பொருத்தமானவர் என்பதில் துளி கூட ஐயமில்லை. காரணம் பார்வை குறைபாடு உடையவர். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்டிருக்கும் இவர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூலம் இளம்வீரர்களின் திறமையை முழுமையாக வெளிக் கொண்டுவர முடிகிறது என்பதை இந்த தொடர் நிரூபித்துக் காட்டி இருக்கிறது.
நம்பிக்கை...
இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன், “கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தங்கள் அணியில் க.பெரியசாமி, ஜெபசெல்வின், ஆனந்த், சந்தான சேகர் ஆகியோரை தேர்வு செய்து இருக்கிறோம்.எங்கிருந்து வருகிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. நன்றாக ஆடினால் வாய்ப்பு பிரகாசமாக அமையும்” என்று கூறியிருந்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பெரியசாமி தனது திறமையை தமிழகமே அறியும்படி நிரூபித்தும் காட்டிவிட்டார்.
திசை மாறிய பறவை...
சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட பெரியசாமிக்கு குடும்பத்தின் வறுமை திசையை மாற்றிய போதும் விடாப்பிடியாக தனது நண்பர் ஜெயப்பிரகாஷிடம் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றுள்ளார். பெரியசாமியின் ஆர்வத்தைப் பார்த்த ஜெயப்பிரகாஷ் பந்துவீச்சில் முழுமையாக கவனத்தை செலுத்தியிருக்கிறார். அவர் அளித்த பயிற்சியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசுகளை அள்ளி வந்தார். இலங்கை வீரர் மலிங்காவை போல் பந்து வீசுவதை பார்த்து ஆச்சரியப்பட்ட சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது. கிடைத்த அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
வறுமையின் பிடியில்...
பதித்திருக்கும் பெரியசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அருவங்காடு. இவருக்கு கவிதா, உமாராணி ஆகிய இரு சகோதரிகளும், கண்ணன், ராம் ஆகிய இரண்டு சகோதரர்களும் உள்ளனர். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் ஏழாம் வகுப்பு மட்டுமே படித்தார். லாரி ஓட்டுநரான தந்தை கணேசன் உடல் நலக்குறைவால் அந்த வேலைக்கும் செல்லவில்லை. தனது வீட்டிலேயே சிறிய டி கடை நடத்தி வருகிறார். ஆடு, மாடுகள் வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டும் அம்மா காந்தாமணி குடும்பத்தை நடத்தி வருகிறார்.
தீராத தாகம்...
குடும்ப வருமானத்திற்காக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆடு, மாடு மேய்த்ததோடு நெசவு தொழில், நூல் மில் வேலைகளுக்கும் சென்ற பெரியசாமி, கிரிக்கெட் மீது கொண்ட தீராத மோகத்தால் நண்பர் நடராஜனுடன் கிராம அளவில் கிரிக்கெட் விளையாடி வந்தார். ஜெயப்பிரகாஷ் என்கிற நண்பர் மருத்துவ உதவிகள் மற்றும் கிரிக்கெட் பயிற்சியும் கொடுத்ததால் படிப்படியாக முன்னேறிய பெரியசாமியின் சாதனை. பெற்றோர், உறவினர், நண்பர்கள், கிராம மக்களையும் உச்சி முகர செய்திருக்கிறது. இந்த வெற்றியை கிராமமே ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது. திறமை, ஆர்வம், உத்வேகம் கொண்ட இளைஞர்கள் அனைத்துதுறைகளிலும் இருக்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி ஆற்றலை முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் சிலரே வெற்றி பெறுகிறார்கள். அத்தகையோரில் இளம் கிரிக்கெட் வீரர் பெரியசாமியும் ஒருவர். சாதனைக்கு படிப்பு முக்கியமல்ல. லட்சியமும் அதை வென்றெடுக்கும் ஆர்வமும் இருந்தால் போதும் சாதனை படைக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கும் அவரது வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துவோம்.