இரட்டை ஆதாய பதவி விவகாரம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறை அலுவலராக பணியாற்றி வரும் நீதிபதி டி.கே. ஜெயின் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, லஷ்மண், திராவிட் மற்றும் சிஏசி கமிட்டியில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். சச்சின், கங்குலி, லஷ்மண், திராவிட் ஆகியோருக்கு விளக்கத்திற்கான கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், சிஏசி கமிட்டியில் உள்ள கபில்தேவ், அன்சுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி(பெண்) உள்ளிட்டோருக்கு அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என கெடுவிதிக்கப்பட்டது. விளையாட்டுத் துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் சாந்தா ரங்கசாமி (இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன்) சிஏசி ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் பதவியிலிருந்து முதல் ஆளாக ராஜினாமா செய்தார். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க இயக்குநர் பதவியிலிருந்து சாந்தா ரங்கசாமி விலகினார்.
அடுத்ததாக முன்னாள் கேப்டனும், உலகக்கோப்பை பெற்றுத் தந்தவருமான கபில்தேவ் சிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கபில்தேவ் தொலைக்காட்சி வர்ணனையாளர், மின்னொளி விளக்குகள் நிறுவன உரிமையாளர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க உறுப்பினர் பதவி என மூன்று பதவியில் பணியாற்றி வருகிறார். நான்காவதாக சிஏசி பொறுப்பு வேறு இருப்பதால் டி.கே. ஜெயினின் நோட்டிஸில் இருந்து தப்பிக்க கபில்தேவுக்கு வேறு வழி இல்லை. இதனால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் மற்றும் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய ராஜினாமா குறித்த முடிவை கபில்தேவ் வெளியிட்டுள்ளார்.
ரவிசாஸ்திரிக்கு சிக்கல்
சிஏசி குழுவால் தான் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக சிஏசி உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதால், ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகத் தொடர்வாரா, இல்லை மீண்டும் பயிற்சியாளர் தேர்வு நடைபெறுமா? என்ற குழப்பம் நீடிக்கிறது. இதனால் ரவி சாஸ்திரிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
டி.கே. ஜெயினின் நோட்டிஸுக்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் முன்னாள் பயிற்சியாளரான அன்சுமன் கெய்க்வாட் பிசிசிஐ துணை கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். மேலும் சொந்தமாக அகாடமி நடத்தி வருவதால் அன்சுமன் கெய்க்வாட் தான் வகிக்கும் சிஏசி பொறுப்பை விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஏசி என்றால் என்ன?
சிஏசி (CAC - CRICKET ADVISORY COMMITTE) என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மிக முக்கியமான அமைப்பாகும். இந்த அமைப்பு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் செயல்படும். இந்த சிஏசி அமைப்பில் மொத்தம் 3 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை இந்த குழு தான் தேர்வு செய்யும். ஆலோசனை மற்றும் மிக முக்கியமான உத்தரவை பிசிசிஐ-க்கு பிறப்பிக்கும். உத்தரவை பிசிசிஐ செயல்படுத்த வில்லையென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிடும் அபாயகரமான அமைப்பாகும். தற்போதைய சிஏசி குழு கபில்தேவ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. உறுப்பினர்களாக அன்சுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி (பெண்) ஆகியோர் உள்ளனர். இதில் கபில்தேவ், சாந்தா ரங்கசாமி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அன்சுமன் கெய்க்வாட் தனி ஆளாக சிஏசியை கவனித்து வருகிறார்.