tamilnadu

img

இன்று ஐபிஎல் ஏலம்

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஐபிஎல் தொடருக்கான ஏல நிகழ்ச்சி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தான் நடைபெறும். ஆனால் இந்த முறை பிசிசிஐ தலைவர் கங்குலியின் சொந்த ஊரான மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் வியாழனன்று நடைபெறுகிறது.  186 இந்தியர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 332 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதிலிருந்து 73 வீரர்களை 8 அணிகளும் ஏலத்தில் எடுக்க உள்ளன. ஏலத்தின் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலையில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. ஏலம் தொடர்பான நிகழ்வுகளில் பிரபலமான  ஹக் எட்மீட்ஸ்  (இங்கிலாந்து)  ஐபிஎல் ஏலத்தை நடத்த உள்ளார்.  பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும் ஏல நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் -1, தமிழ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏல நிகழ்ச்சிக்குப் பாதிப்பு உண்டா?

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லி, அசாம், திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மாணவர்கள் அதிகளவில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கும் கொல்கத்தாவின் சில பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டம்  நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களால் ஏல நிகழ்ச்சிக்குப் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. ஏனென்றால் ஏல நிகழ்ச்சி கொல்கத்தாவின் ஏதாவது பெரிய நட்சத்திர உணவகத்தில் நடைபெறும் என்பதால் போராட்டக்காரர்கள் அங்கு நுழைய மாட்டார்கள். எனினும் அணி உரிமையாளர்கள் மற்றும் ஏலத்திற்குத் தொடர்புடைய நபர்கள் இயல்பாக அந்த உணவகத்திற்கு வருவது சிரமம் தான். போராட்டத்தால் அதிக பாதிப்புகளைச் சந்தித்திருக்கும் ஹவுரா பகுதியைத் தாண்டி வருவது கடும் சிக்கலை உருவாக்கும்.