இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கீழ் செயல் படும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான நிர்வாக தேர்தல் சனியன்று (28-ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பொதுக்குழு மூலம் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களைப் போட்டியின்றி தேர்வு செய்தது. தலைவராக முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற மாநிலங்களுக்குத் தேர்தல் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கும் நிலை உரு வாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்குவங்க (பெங்கால்) கிரிக்கெட் சங்கத் தலைவராக கிரிக்கெட்டின் தாதாவும், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனு மான சவுரவ் கங்குலி போட்டியின்றி வெள்ளியன்று தேர்வு செய்யப்பட்டார். சனியன்று நடைபெறும் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் கங்குலி முறைப்படி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். கங்குலியுடன் பொருளாளர், இணைச் செயலாளர், செயலாளர்கள் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.