எந்தத் துறையாக இருந்தாலும் சாதிப்பதற்கு வயது எப்போதும் ஒரு தடையாக இருந்ததில்லை. இதை இளையோர் உலகக் கோப்பைக்கு தேர்வாகிய 17 வயது சிறுவன் நிரூபித்தும் காட்டியிருக்கிறான். இதற்காக அவன் கடந்து வந்த பாதை அத்தனை எளிதானதல்ல.
விடியாத இரவுகள்...
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பூபேந்திர ஜெய்ஸ்வால்- காஞ்சன் தம்பதியின் 6 பிள்ளைகளில் யஷஸ்வி பூபேந்திர குமார் ஜெய்ஸ்வால் நாலாவது. ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் சிறு வயது முதல் கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிரியம். சச்சின், கங்குலி, டிராவிட் போன்று தானும் பெரிய ஆளாக வரவேண்டும் என்று கனவுகளை சுமந்து கொண்டு மும்பை தாதர் பகுதிக்குள் நுழைந்த போது வயது 11. அந்த ஊரும் புதுசு. அங்குள்ள நபர்களும் புதுசு. எங்கு தங்குவது? யாரிடம் தஞ்சம் புகுவது? சாப்பாட்டுக்கு என்ன வழி? என்பது கூட தெரியாமல் பால் பண்ணையின் தெருவோரத்தில் படுத்து உறங்கிய போது அங்கிருந்தவர்கள் விரட்டியடிக்க முதல் நாள் இரவு விடிந்தது.
தணியாத தாகம்...
இந்த மாதம் 28 ஆம் தேதி 18வது பிறந்த நாளை கொண்ட உள்ள யஷஸ்வி மும்பை நகரில் வேலை கேட்டு பல நாட்கள் அலைந்தது தான் மிச்சம். சாப்பாட்டிற்கு வழியில்லாமல் மகன் திண்டாடியதை அறிந்த பெற்றோர் உறவினர் (யஷஸ்வியின் மாமா) உதவியை நாடினர். அவரும் சில நாட்கள் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதி கொடுத்தார். முதலில் வயிற்றுப் பசியை போக்க என்ன வழி என்று யோசித்த பால் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை கிடைத்தது. காலை 5 மணிக்கு பயிற்சிக்குச் செல்வதால் மதியம் தான் கடைக்கு செல்ல முடிந்தது. அதுவும் பல நாட்கள் தாமதமாக சென்றதால் அந்த வேலையும் பறிபோனது.
தனது லட்சியத்திலிருந்து பின்வாங்கக்கூடாது என்பதில் விடாபிடியாக நின்றதால், மும்பையில் குழந்தைகள் கிரிக்கெட் பயிற்சி பெறும் புகழ் பெற்ற ஆசாத் மைதானத்தை நோக்கி பயணித்தார். அங்கு இம்ரான் என்பவரின் அறிமுகம் கிடைக்க “நீ சிறப்பாக கிரிக்கெட் விளையாடினால் இந்த மைதானத்திலேயே தங்க அனுமதிப்போம்” என்று கூறியது சிறிது ஆறுதலாக இருந்தது. அந்த சவாலில் வெற்றி பெற்றதால் தங்குவதற்கு இடம் கிடைத்தது. சொகுசு பங்களா அல்ல. மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்த ‘டெண்ட்’ கொட்டகை. அதில் கழிப்பறை வசதி கூட கிடையாது. பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்த டெண்ட் கொட்டகை வாழ்க்கை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. மூன்று வருடங்கள் கழிந்தன. தன்னுடைய கவலைகளை சொல்லக் கூட ஒருவரும் இல்லை. தங்குவதற்கு மட்டுமே இடம் கிடைத்தது. கையில் காசு கிடைக்கும் போது அப்பா அனுப்பி வைக்கும் அந்த சிறு தொகையில் போதுமானதாக இல்லை. இதனால் அந்த மைதானத்தில் காலையில் பந்து பொறுக்கிப் போடும் வேலையும் இரவு நேரங்களில் பானிபூரியும் விற்று வந்தார். அப்படித்தான் பல இரவுகள் ஓடின. ஆனாலும் தான் படும் கஷ்டங்கள் பெற்றோருக்கு ஒரு போதும் தெரியாது. தெரியப்படுத்தவும் இல்லை.
வாராது வந்த மாமணி...
இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மையம் நடத்தி வந்த ஆசாத் மைதானத்தில் யஷஸ்வி ஜெயஷ்வாலின் ஆட்டத்தைப் பார்த்து வியர்ந்த இந்திய ‘ஏ’ அணியின் முன்னாள் வீரர் ஜவாலா சிங்கினால் யஷஸ்வி வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. யஷஸ்வி ஜெய்ஷ்வாலாவின் ஏழ்மையை கேள்விப்பட்டதும் தனது வீட்டுக்கு அழைத்து சென்று அங்கேயே தங்க வைத்துக் கொண்டார். இன்று வரைக்கும் அந்த வீட்டில்தான் தங்கி இருக்கிறார். கிரிக்கெட் மட்டைக்கூட இல்லாமல் இருந்த யஷஸ்விக்கு வாசிம் ஜாபர், திலிப் வெங்சர்க்கார், சச்சின் தலா ஒரு கிரிக்கெட் மட்டையை வழங்கியுள்ளனர்.
முத்தான முத்தல்லவோ...
நான்காண்டுகளுக்கு முன்பு (2018) பள்ளி மாணவர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே ‘முச்சதம்’ அடித்து இறுதி வரையிலும் எதிர் அணி பந்துவீச்சாளர்கள் இவரை வீழ்த்தவே முடியவில்லை. ரன் குவிப்பு மட்டுமல்ல பந்து வீச்சிலும் எதிரணியை திணறடித்து சிறந்த ‘ஆல்ரவுண்டர்’ விருதையும் தட்டி ‘லிம்கா’ புத்தக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்தார். உள்ளூர் அணிகளில் விளையாடி வந்த யஷஸ்வி 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை சீசனில் முதன் முதலாக களம் கண்டார். அதனைத் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோர் ஏசிசி ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 85 ரன்கள் விளாசி கோப்பையை வென்று கொடுத்து மேன் ஆப் தி மேட்ச் விருதை தட்டினார். இந்த ஆண்டி துவக்கத்தில் இந்தியா,இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் 6 ஆட்டங்களில் 4 அரைசதங்களுடன் 300 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. 173 பந்துகளை எதிர்கொண்டு 220 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 183 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 85 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.
உலக சரித்திரம்..
சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணியின் துவக்க வீரராக களமிறங்கி 12 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் ஜார்கண்ட் பந்து வீச்சில் ருத்ரதாண்டவம் ஆடினார். 154 பந்துகளை எதிர்கொண்டு ‘இரட்டைச் சதம்’ விளாசி உலக சாதனை படைத்து கிரிக்கெட் உலகில் அனைவராலும் பாராட்டப்படும் நபராக உருவெடுத்தார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், சுழற்பந்து வீச்சாளர் நீதம் ஆகியோர் பந்துகளை பதம் பார்த்த அவர், 1975 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் பாரோ 20 வயதில் அடித்த இரட்டை சதத்தை 44 ஆண்டுகளுக்குப் பிறகு 17 வயதில் முறியடித்தார்.
சச்சின் வரிசையில்...
தொடக்க வீரராக அறிமுகமாகி முதல் தொடரிலேயே இரட்டைச் சதம் அடித்து யாஷஸ்வி ஜெய்ஷ்வாலா லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட்டில் சச்சின், சேவாக், ரோகி,த் தவான், கௌஷால், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அடுத்து அந்த இடத்தை பிடித்து 19 வயதுக்குட்பட் டோர் இந்திய அணியில் இடம் பிடித்திருப்பதால் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இடது கை ஆட்டக்காரரான இவர் தற்போது, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட், தென்னாப்பிரிக்கா தொடருக்கும் தாய்நாட்டுக்காக விளையாட இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
தியாகத்தின் மறு உருவம்!
இந்தியன் ஆயில் அணிக்காக இணைந்து விளையாடிய ஜெய்ஸ்வால் அந்த தொடரின் ‘மேன் ஆஃப் தி சீரிஸ்’பட்டத்தை வென்ற அந்த அனுபவத்தை நினைவுபடுத்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்,“ஒரு சீசனில் அண்டர் 16, அண்டர் 19, ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே என நான்கு உள்நாட்டு தொடர்களிலும் ஒரு வீரர் விளையாடி இருக்கிறார் என்றால் அது இவராகத்தான் இருக்கமுடியும்” . இந்திய கிரிக்கெட்டில் சமீபகாலமாக போராட்ட குணம் அரிதாகி விட்டது ஆனால் ஜெய்ஸ்வால் இடம் அந்த குணம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. கிரிக்கெட் மட்டும் தான் விளையாட வேண்டும் என்றால் பலதை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள் அதை நிரூபித்தும் காட்டிருக்கிறார் இந்த ஜெய்ஸ்வால். இது வெறும் தொடக்கம் தான் என்றும் வாசிம் ஜாபர் பாராட்டியிருக்கிறார். தந்தையாகவும், தாயாகவும் இருந்து கிரிக்கெட் பயிற்சியும் கொடுத்து வரும் ஜவாலா சிங்,“ஆசாத் மைதானத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலாவை சந்தித்த போது உன் வீடு எங்கே என்று கேட்டேன். அப்போது அந்தச் சிறுவன் சொன்ன பதில் இப்போதும் என் நினைவில் நிற்கிறது. எங்கே இடமிருந்தாலும் அங்கு தாங்கிக் கொள்வேன். அதுவே எனது வீடாக இருக்கும் என்றான். அவனது இந்த பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது” என்று கூறியிருக்கிறார். இளமையில் வறுமை என்பது கொடுமையிலும் கொடுமை. அப்படிப்பட்ட ஏழ்மை, வறுமையை வென்று கிரிக்கெட் உலகில் அனைவரும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள யஷஸ்வி இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. அவர் கண்டிப்பாக சர்வதேச சீனியர் கிரிக்கெட்டிலும் ஜொலிப்பார் என்பதில் சந்தேகமில்லை.