முழு உலகமும் இன்று கொரோனா வைரஸ் என்ற மகா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மிகக் கடுமையான சோதனைக்கு ஆளாகியுள்ளது. இன்றைய நாளில் 20 லட்சத்து 14 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,27,592 பேர் இறந்து போயுள்ளனர். அனைத்து கண்டங்களையும் இன்று சோகம் சூழ்ந்துள்ளது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களுடைய குடும்பங்களில் இறந்தவர்களுக்காக துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறார்கள். பல கோடி மக்கள் பதற்றத்திலும் பயத்திலும் இருக்கின்றனர். உலக தொழிற்சங்க கூட்டமைப்பு அனைவருக்கும் தனது ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.
ஏகபோக மற்றும் நாடுகடந்த தொழில் நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்கின்றன. தொழிலாளர்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றன. பல அரசாங்கங்கள் கொரோனா வைரசை காரணம் காட்டி ஜனநாயக உரிமைகளையும், தொழிற்சங்க உரிமைகளையும் தடை செய்து கொண்டிருக்கின்றன. மின்னணு கருவிகளையும், வழிமுறைகளையும் பயன்படுத்தி குடிமக்களின் நடமாட்டங்களையும் செயல்பாடுகளையும் கண்காணிப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த தொற்று நோயினால் உலகளவில் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டுள்ளன, ஆபத்திற்குள்ளாகியுள்ளன.
மீண்டும் அம்பலமான சுரண்டல் அமைப்பு
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சுரண்டல் சமூக கட்டமைப்பின் குணாம்சம் மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுரண்டல் கட்டமைப்பால் மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை நெருக்கடியான காலக்கட்டத்தில் கூட எடுக்க முடியாது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதலாளித்துவ அரசாங்கங்களும், முதலாளித்துவ வர்க்கமும், சீர்திருத்த தொழிற்சங்கத்தின் தலைவர்களும் உண்மையை மூடி மறைக்க எவ்வளவு கடினமாக முயன்றாலும், முதலாளித்துவ கட்டமைப்பின் பொறுப்புகளை மறைக்க முயன்றாலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
அவர்களால் மக்களின் மனங்களை தனிமைப்படுத்த முடியாது. சாதாரண மக்களின் மனங்கள் அவர்களுடைய அனுபவங்களில் இருந்து சிந்திப்பதையோ, பரிசீலனை செய்து ஒரு தீர்மானத்திற்கு – முடிவிற்கு வருவதையோ அவர்களால் தடுக்க முடியாது. இந்த காலகட்டத்தில் நாம் வாழும் நிலைமைகள் பின்வருபவற்றை நிரூபிக்கின்றன:
தொழிலாளி வர்க்கத்தின் மேன்மை
முதலாவதாக - ஆளும் வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் தார்மீக மேன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த நெருப்பு தொற்றின் முன் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்த முதலாளித்துவ ஒட்டுண்ணிகள் ஊக வணிகம் புரிந்துகொண்டிருக்கின்றன. சக்தி மிக்க தொழிலதிபர்களும், அரசர்களும், முக்கியஸ்தர்களும் தங்களுடைய அரண்மனைகளில் ஒளிந்து கொண்டிருக்கும்போது, உழைப்பாளி மக்களும், அறிவுசார் தொழிலாளிகளும் போர்ப்படையின் முன்னே நின்று போராடிக் கொண்டிருக்கின்றனர். உணவு உற்பத்தியில், மருந்து தயாரிப்பில், மருத்துவமனைகளில், போக்குவரத்துத் துறைகளில், தூய்மைப் பணிகளில், தகவல் தொடர்புத் துறைகளில், மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறைகளில் என்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துத் துறைகளிலும் அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏழை விவசாயி வர்க்கம் சாமானிய மக்களுடன் இணைந்து உணவுப் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.
பணத்தைத் திருடும் ஆளும் வர்க்கம்
மறுபுறம், இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற ஆளும் வர்க்கம் இந்த பேரழிவு தொற்று அபாயத்தினை பயன்படுத்திக் கொண்டு, விலை ஏற்றி சாதாரண மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திருடிக் கொண்டிருக்கின்றன. செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவதற்காக பொருட்களை பதுக்கிக் கொண்டு ஊக வணிகத்தை புரிந்து கொண்டிருக்கின்றன. போர்க்காலங்களில், நெருக்கடியான காலக்கட்டங்களில் கூட அவர்களுடைய ஒரே தெய்வமாக இருக்கின்ற லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு புறம் உழைக்கும் வர்க்கமும் அதன் கூட்டாளிகளும். மறுபுறம் முதலாளித்துவ வர்க்கமும் அதன் கருவிகளும் என இரட்டை உலகங்கள், இரட்டை நெறிமுறைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
யார் பொறுப்பு? தனியாரா? பொதுத் துறையா?
இரண்டாவதாக – யார் தற்போது மருத்துவம் அளிப்பது மற்றும் குணப்படுத்துவது என்ற முழு சுமையையும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்? தனியார் துறையா அல்லது பொதுத் துறையா? பல ஐரோப்பிய நாடுகளில், சாதாரண மக்கள், நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியின் விளிம்பில் இருக்கின்றனர். பொது சுகாதாரத் துறைகளில் உள்ள மற்றும் பொது மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் ஊழியர்களையும், பொது சுகாதார கட்டமைப்புகளில் உள்ள விஞ்ஞானிகளையும் பாராட்டும் விதமாக, மக்கள் பால்கனியில் வந்திருந்து கைதட்டி ஆரவாரிக்கின்றனர். இத்தனை நாளும் இகழ்ச்சியாகப் பார்க்கப்பட்ட இந்த பொது சுகாதார மருத்துவத் துறை தான்;
இந்த பொது மருத்துவர்களும், நர்சுகளும், பொது சுகாதாரத் துறையின் பிற ஊழியர்களும் தான் இன்று நிகரில்லா சமரை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகரில்லா சமரை அவர்கள் நிகழ்த்த வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? “அரசுத்துறைகளை குறைத்து தனியார்மயமாக்கலை அதிகப்படுத்த வேண்டும்” என்று பல ஆண்டுகளாகக் குரைக்கும் சமூக ஜனநாயக மற்றும் பழமைவாத அரசுகள்பொது சுகாதாரத் துறையின் மனித வளங்களையும் உபகரணங்களையும் குறைத்து போதுமான அளவில் இல்லாமல் செய்ததன் காரணமாக இன்றைக்கு பொது சுகாதார மறறும் மருத்துவத் துறை ஊழியர்களும், செவிலியர்களும், மருத்துவர்களும் இந்த நிகரில்லா போரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
வெல்ல முடியாத போர்ப்படையாக...
இருந்த போதும், இப்படிப்பட்ட அரசுகளால் கைவிடப்பட்ட இந்த பொது சுகாதார மருத்துவத் துறை ஒரு வெல்ல முடியாத போர்ப்படையைப் போல், போதுமான ஆயுதங்கள் இல்லாமல், போதுமான உபகரணங்கள் இல்லாமல், தனி நபருக்கான பாதுகாப்பு இல்லாமல் தைரியத்துடன் இந்த சமரை நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தாலியில் 61 மருத்துவர்கள் இந்த நோய் தொற்றிற்கு ஆளாகி இந்த நிகரில்லா போரில் உயிர் பலியாகியுள்ளனர். இதே தான் ஸ்பெயினில், பிரான்சில், கிரீசில், அமெரிக்காவில் , இன்னும் பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
மறுபுறம், பொதுத்துறையில் இருந்து திருடிக் கொழுத்த தனியார் ஏகபோக மருத்துவ குழுமங்கள், சாதாரண மக்களின் துன்பங்களை பயன்படுத்தி அவர்களை சுரண்டும் வகையில் அரசாங்கத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு தங்கள் மருத்துவமனையின் படுக்கைகளையும், வைரஸ் டெஸ்ட்டுகளையும் அதிக விலைக்கு விற்று, இரத்தக் கறை கொண்ட லாபக் கட்டுக்களை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.
சோசலிச கியூபாவும், பிற நாடுகளும்
மூன்றாவதாக – இந்த நெருக்கடி மீண்டும் ஒரு முறை உண்மையை உரக்கச் சொல்லியுள்ளது. தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நம்பத்தகுந்த, போலியல்லாத, ஒற்றுமையும் ஆதரவும் வளரத் துவங்கியுள்ளது. வீர கியூப நாட்டில் இருந்து 60 மருத்துவர்கள் வட இத்தாலிக்கு இந்த போரில் சமரிட சென்றுள்ளனர். இந்த உதாரணமானது மக்களை இதைப் பற்றி ஆழமாக சிந்திக்கச் செய்யவும் மதிப்பீடு செய்யவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. சோசலிச கியூப மருத்துவர்கள் இத்தாலிக்கு வந்த நாளில் தான், ஜெர்மனி இத்தாலிக்கு மருத்துவ இயந்திரங்களை அளிக்க மறுத்தது. இத்தாலி கிரீசிற்கு ஏற்றுமதியை நிறுத்தியது. ஸ்பெயினும் இதையே தான் செய்தது. அமெரிக்க மாகாணமான கலிபோர்னியாவின் அரசு சொந்த நாட்டின் இன்னொரு மாகாணமான நியூயார்க்கிற்கு முகமூடிகளை விற்பனை செய்ய மறுத்தது. பிற அமெரிக்க அரசுகள் வெண்ட்டிலேட்டர்களை(செயற்கை சுவாசக் கருவிகளை) மறைத்து வைத்தன.
நாய் நாயைச் சாப்பிடும் உலகம்
ஐரோப்பிய யூனியனின் தலைவர்களைக் கொண்ட உச்சி மாநாடு 2020, மார்ச் 26ம் தேதி நடைபெற்ற போது, மிகப் பெரிய அளவில் இறப்பு எண்ணிக்கையை உடைய ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் சில உதவி நடவடிக்கைகளை கோரிய போது, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற சில நாடுகள் அதனை செய்ய மறுத்துவிட்டன.
முதலாளித்துவம் என்பது நாய் சண்டைகள் நிறைந்த கொள்ளைக் கூட்டங்கள் நிறைந்த ஒரு காடு…..
நாய் நாயைச் சாப்பிடும் உலகம் அது. கடுமையான போட்டிச் சூழலில், தான் வெற்றிபெறுவதற்காக ஒருவருக்கொருவர் தீங்கு செய்யக் கூடத் தயங்காத உலகம் அது.
மறுபுறத்தில் மனிதத்துவத்தையும், ஒற்றுமையையும் காண்கிறோம். இதை தொழிலாளர்களாலும் சோசலிச சமுதாயத்தாலும் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.
தோலுரிக்கப்பட்ட அமெரிக்கா
நான்காவதாக – இந்தத் தொற்றின் காரணமாக, இன்று வரையுள்ள புள்ளிவிவரங்கள் ஏகாதிபத்திய பிரமிடின் உச்சியில் அமர்ந்துள்ள அமெரிக்காவின் வெற்றுக் கொள்கையை தோலுரித்துக் காட்டியுள்ளது. இது வரை அமெரிக்காவை மிகப் பெரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தற்போது கடுமையான ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
அமெரிக்காவில் ஏராளமான முடிவற்ற ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கூலிப்படையினர் உள்ளனர்.
ஆனால், இவையெல்லாம் என்ன செய்தன?
முகக் கவசங்கள் எங்கே?
வெண்டிலேட்டர்கள் எங்கே?
பொது மருத்துவமனைகள் எங்கே?
சமூகப் பாதுகாப்பு எங்கே?
ஏழை மக்களுக்கான மருத்துவமனை படுக்கைகள் எங்கே?
இவற்றிலெல்லாம் மிகப் பெரிய பற்றாக்குறை. தற்போது அவர்கள் மக்கள் சீனக் குடியரசிடமும் ரஷ்யக் கூட்டமைப்பிடமும் இந்த மருத்துவ உதவிகளுக்கு கையேந்தியுள்ளனர். அமெரிக்க நாடு சாதாரண மக்களுக்கு, வேலையில்லாதவர்களுக்கு, பொருளாதாரத்தில் தாழ்ந்த ஏழைகளுக்கு மிக மோசமான சுகாதாரக் கட்டமைப்பினை கொண்ட நாடாக இருக்கிறது.
இந்த மருத்துவமனைகளில் எதுவுமே இலவசம் இல்லை. ஒருவர் ஒவ்வொன்றிற்கும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. உண்மையில் மிக அதிகக் கட்டணம் அனைவருமே செலுத்த வேண்டியுள்ளது. அங்கே 280 லட்சம் மக்கள் மருத்துவக் காப்பீடின்றி உள்ளனர். 330 லட்சம் மக்கள் குறை மருத்துவக் காப்பீட்டுடன் உள்ளனர். 80 லட்சம் மக்கள் வரியெல்லாம் செலுத்திய பிறகும், சட்டரீதியான பத்திரங்கள் எதுவுமில்லாமல் இருக்கின்றனர்.
வேலையில்லாதவர்கள், மூத்த குடிமக்கள், குறைந்த வருமானம் உள்ள மக்கள் ஆகியோருடைய மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட கிடைக்கும் என்ற நிலை தான் அங்குள்ளது. அமெரிக்க பிரஜைகள் இந்த தொற்றினாலும், அரசாங்கத்தின் இது மாதிரியான கொள்கைகளாலும் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது, அதிபர் டிரம்ப் அவர்கள் இந்த ஏகபோக குழுமங்களை பலப்படுத்துவதற்கு 500 பில்லியன் டாலர்களை அறிவித்துள்ளார். இதனோடு கூட, 29 பில்லியன் டாலர்கள் ஆகாய விமானங்களுக்கும், 17 பில்லியன் டாலர்கள் பாதுகாப்பு கம்பெனிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துப்பாக்கி விற்பனையாளர்களின் சார்பாக அவர்களுடைய செயல்பாட்டைத் தொடர்வதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019ல் மட்டும் 40,100 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் உயிரிழந்துள்ள நாடு அது. இதில் 24,100 பேர் தற்கொலை புரிந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் உள்ளது.
இது சம்பந்தமாக, அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து மற்றும் வட ஐரோப்பாவின் பிற நாடுகளில் உள்ள முதலாளிகள் கம்பெனிகளை வேலை செய்ய வைப்பதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை என்று வாதிட்டு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர். பொருளாதாரம் தான் அனைத்தும். தொழிலாளர்களின் உயிர் என்பதோ ஆரோக்கியம் என்பதோ அவர்களுக்கு ஒன்றுமில்லை. இந்த தந்திரத்தை முன்னிறுத்தி தான் ட்ரம்ப், பொல்சானாரோ மற்றும் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்கள் இன்னும் சில நாட்களில் இந்த தொற்றில் இருந்து விடுபட்டுவிடுவோம் என்று உறுதிபடப் பேசி வருகின்றனர்.
கார்ப்பரேட் மோதல்களின் உண்மை முகம்
ஐந்தாவதாக – கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் விவகாரத்திலும், குணப்படுத்தும் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் விவகாரங்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே நிகழ்ந்து வரும் சண்டை சச்சரவுகள் மற்றும் வீண் விரோதங்கள் போன்றவற்றின் மூலம் அவற்றின் உண்மை முகம் தெரிய வந்துளளது. தொழிலாளர்களுக்கு எதிராகவும், அவர்களது போராட்டங்களுக்கு எதிராகவும் ஒன்றிணையும் போதும், தொழிலாளர் விரோத கொள்கைகளை உருவாக்கும் போதும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுக்கும் போதும் இவை பொது எதிரியான தொழிலாளர்களுக்கு எதிராகஒன்றிணைந்து நிற்பதனை நாம் பார்க்கிறோம். அதே நேரத்தில் லாபம் காணும் ஊக வணிகத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகின்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்களின் இரகசியங்களை திருடிக் கொள்ள முயல்கின்றனர். யார் இதற்கான தடுப்பு மருந்தினை கண்டு பிடித்தாலும் அவர்களின் லாபமானது வான் வரை எட்டிவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். இது இலாபத்திற்கான நாய்ச் சண்டையாகும். பொது சுகாதாரத்தில் அக்கறை கொண்டு இது செய்யப்படவில்லை.
ஆகவே, மேலே கூறிய அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இந்த தொற்றில் நாம் அனைவரும் சமமானவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்படுகிறது. அதே போல “இந்த நெருக்கடியில் இருந்து விடுபட அனைவரும் ஒன்றுபடுவோம்” என்று அரசுகள் சொல்வதில் தொழிலாளர் சார்ந்த எந்த உள்ளடக்கமும் இல்லை. ஒரு வேளை செல்வந்தர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அவருக்குக் கிடைக்கும் மருத்துவ வசதி என்பது நிச்சயம் ஒரு வேலையற்றவர் பெறும் மருத்துவ வசதியில் இருந்து மாறுபட்டதாகவும் உயர்ந்ததாகவும் இருக்கும். மேலும், இந்த நெருக்கடியில் சாதாரண மக்கள் தான் வேலையிலும், சம்பளத்திலும் மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாக ஒவ்வொரு நிலையிலும் பாதிக்கப்படுவர்கள்.
முதலாளித்துவத்தை மருந்துகளால் மனிதநேயப்படுத்த முடியாது
ஆகவே, முதலாளித்துவ வர்க்கமும் அதன் வழிமுறைகளும் சூழ்ச்சிகளும் இந்தச் சூழலை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு சாதாரண மக்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளையும், சுதந்திரங்களையும் கடுமையாக தட்டிப் பறித்து கட்டுப்படுத்துவார்கள்.
இந்தச் சூழலில், முதலாளித்துவம் நோய்களை உருவாக்கும், மறு உருவாக்கமும் செய்யும், வேதனை கொடுக்கும், சுரண்டவும் செய்யும். முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தனமானது. காலத்திற்கு ஒவ்வாமல் முரண்பட்டு நிற்பது. அதை மனிதநேயப்படுத்துவது என்பது இயலாதது. சமூகச் சுரண்டலின் வேலையாட்களாக இருக்கும் சீர்திருத்தவாதிகள் நவீன வடிவத்திலான சுரண்டல் கட்டமைப்பினை தீர்வாக சொல்வார்கள். முதலாளித்துவத்திற்கு தடுப்பூசியோ தடுப்பு மருந்துகளோ இல்லை, இனிமேலும் கண்டுபிடிக்க முடியாது. அதனை மருந்துகளால் மனிதநேயப்படுத்தவும் முடியாது. அதனுடைய ”கருவறை”யில் இருந்து உருவானது தான் இந்த சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை ஆகும்.
இந்த தொற்று நோய் முதலாளித்துவத்தை அம்மணமாக்கிவிட்டது, அதனுடைய முகமூடிகளை கழற்றி விட்டது. அதனுடைய ஆடம்பர ஆடைகளை அவிழ்த்துவிட்டது.
ஆகவே இன்று, அனைத்து போராளிகளின் கடமையும் மிக அவசியமாக மிகத் துரிதமாக தேவைப்படுகிறது. முதலாளிகளும் முதலாளித்துவ சுரண்டலும் இல்லாத ஒரு சமுதாயத்தை படைப்பதற்காக அனைத்து தொழிலாளர்களையும் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டிய மிக முக்கியமான மிக அவசர அவசிய கடமை நம் முன்னே உள்ளது. அனைத்து தொழிலாளர்களும், ஒன்றிணைவதன் மூலம் இதனை நாம் சாத்தியமாக்கலாம். அன்றாட பிரச்சினைகளுக்கு எதிரான நமது போராட்டம் நியாயமானது தான். தொழிலாளி வர்க்கத்தின் சமூக விடுதலைக்கான போராட்டம் என்பது மிக மிக அவசியமாகும்.
தமிழில்: ஆர்.எஸ். செண்பகம்