கோவை, ஏப்.26 - கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நூறு பேருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் குராசாமணி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் உள்ள 16 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சமூக பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், அத்தியாவசிய காரணங்களுக்காக வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் அநாவசியமாக வருபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரியை சேர்ந்த கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார். மேலும், கோவையில் 116 பேர், திருப்பூரில் 59, நீலகிரியில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் , கொரோனா குணமடைந்த பலர் பிளாஸ்மா சிகிச்சையளிக்க தங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.