போக்குவரத்து சிக்னலுக்கான மின் கட்டணத்தை யார் கட்டுவது என காவல்துறையும், கோவை மாநகராட்சியும் நடத்திய போட்டாபோட்டியால் கோவை மாநகரத்தில் பாதிக்கும் மேற்பட்ட சிக்னல்களின் மின்இணைப்பை மின்வாரியம் துண்டித்திருப்பதால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கோவை மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் துவங்கி காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்றம் என அனைத்து முக்கியஅலுவலகங்களும் நகரத்திற்குள்ளேயே உள்ளது. இதுபோக ரயில்நிலையம், நகர பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் ஆகியவையும் நகரத்தின்மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இந்நிலையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வாகன எண்ணிக்கையால் கோவை மாநகரின் அனைத்துசாலைகளும் நெரிசல் மிக்கதாக மாறியுள்ளது. இதனை சரிப்படுத்தபோக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறுமுயற்சிகள் மேற்கொண்டாலும் நெரிசலுக்குமுழுமையாகத்தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தசாலையின் முக்கிய பகுதிகளில்உள்ள சிக்னல்கள் ஓரளவிற்காவது போக்குவரத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.
இந்நிலையில் இந்த போக்குவரத்து சிக்னலுக்கு மின் கட்டணத்தை செலுத்தாததால் தற்போது கோவை மாநகரத்தில் உள்ள பல சிக்னல்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவலர்கள் கூறுகையில், கோவை மாநகரத்தில் முக்கிய சாலைகளின் பிரிவுகளில் 62 போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல்கள் 24 மணிநேரமும் இயங்கக் கூடியது. இந்த போக்குவரத்து சிக்னல்களை தனியார் ஒத்துழைப்புடன் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை பராமரித்து வந்தாலும், இதற்கான மின் கட்டணத்தை கோவை மாநகராட்சியே செலுத்தி வந்தது. தற்போது இதற்கான மின் கட்டணத்தை கோவை மாநகராட்சி செலுத்தாததால் 62 சிக்னல்களில் 21 சிக்னல்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களின் மின் இணைப்பும் துண்டிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இந்த போக்குவரத்து சிக்னலுக்கான மின் கட்டணத்தை நாங்கள்செலுத்த முடியாது. காரணம் எங்களுக்கு விதி மீறும் வாகனங்களுக்கு விதக்கப்படும் அபராதம் மூலம் வசூலிக்கப்படும் வருவாய் அனைத்தும் அவ்வப்போதே மாவட்ட கருவூலத்தில் செலுத்தி விடுவோம். எங்கள் துறையின் சார்பில் தனியாகஎதற்கும் செலவு செய்வது என்பது எப்போதும் நடைமுறையில் இல்லாதது. ஆகவே மாநகராட்சிதான் இதற்கான மின் கட்டணத்தை கட்ட வேண்டும் என தெரிவித்தனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் விளம்பரம் செய்ய அனுமதித்தோம். அதன்மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் போக்குவரத்து சிக்னல்களின் மின் கட்டணத்தை செலுத்தி வந்தோம். சமீபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டதால் இதன்மூலம் கிடைக்கும் வருவாய் முற்றிலும் இல்லாமல் போனது. ஆகவேதற்போது போக்குவரத்து சிக்னலுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர். தனியார் பங்களிப்போடு அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் லாபம்இருந்தால் மட்டுமே தனியார் தங்களின் பங்களிப்பை செலுத்துவார்கள். எதுவும் தேறாது என்னும் நிலையில் தனியார் நிறுவனங்கள் விலகி விடுவர் என்பதற்கு தற்போதுகோவை மாநகரத்தின் போக்குவரத்து சிக்னல்களே உதாரணம்.
- அ.ர.பாபு