தொழில்முனைவோரில் தொடங்கி கடைநிலைத்தொழிலாளி வரை அரசு அறிவிக்கும் நிவாரணமே அவர்களின் வாழ்வைத் தீர்மானிப்பதாக மாறி நிற்கிறது. ‘அரசே! போதிய நிவாரணங்கொடு’ என தொடர்ந்து வலியுறுத்துவதும் ‘அறிவிக்கப்பட்ட நிவாரணங்களை முறையாக வழங்கு’ எனத் தொடர்ந்து தலையிடுவதும்தான் இன்றைய முக்கியப் பணி.
ரேசன் அட்டை வைத்திருப்பவர்க ளுக்கும் ரேசன் அட்டை இல்லாதவ ர்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி அளவிட முடியாததாக மாறி நிற்கிறது. ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் அந்த உணவுதானியப் பொருள்களும் கிடைக்க எந்த வழியும் இல்லை. அவர்கள் பொதுவெளிக்கு வரவே முடியாத சூழல்.
கொளுத்தும் வெயிலில் கோரிப்பா ளையம் சிக்னலில் ஊதுவத்தி விற்கும் சிறுமியையும் பெரியார் பேருந்துநிலையப் பாலத்தில் வெள்ளரி க்காய் விற்கும் சிறுவனையும் பார்க்காதவர்கள் மதுரையில் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அந்த வெயிலைவிட வெப்பமான வாழ்க்கை க்குள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். அரசின் எந்த நிவாரணங்களுக்கு ள்ளும் வரமுடியாத பெருங்கூட்டம் குரலற்று ஒடுங்கிக்கிடக்கிறது.
ரேசன் அட்டை களுக்கும் கீழே இருக்கும் இத்தகைய மனிதர்கள் எத்தனை பேர்? சமைத்து உணவருந்த முடியாத நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு மதிய உணவு வழங்கலாமா என்று யோசித்தோம். தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்ட வர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என விளிம்புநிலை மக்கள் நமது நகரத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் எனக் கணக்கிட முயன்றோம். எதனையும் கணக்கிட்டால்தானே திட்டமிட்டுக்கொள்ள வசதியாக இருக்கும், அதனால் அம்முயற்சியில் ஈடுபட்டோம்.
பள்ளிக்கூட வாசல்களில் உட்கார்ந்து நெல்லிக்காயும் முறுக்கும் எலந்தைப்பழமும் விற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கை மட்டுமே அறுநூறைத் தொட்டது. கணக்கெடுப்பை மாற்றிக்கொ ண்டோம், நம்மால் என்ன முடியும் என்று கணக்கெடுக்கத் தொடங்கினோம். அப்பொழுதும் புள்ளிவிபரங்கள் சரியாக இல்லை; ஆனால்,முடியும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் மட்டும் துலக்கமாக இருந்தன.
எனவே, தொழிலாளர்கள் தினத்தில் தொடங்குகிறோம், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கான மதிய உணவு வழங்கும் ‘மாமதுரையின் அன்னவாசல்’ திட்டத்தை. சமையலுக்காக தங்களின் உழைப்பைத் தருபவர்கள், உணவு ப்பொட்டலத்தைத் தேவைப்படுவோரின் இருப்பிடத்திற்கு நேரடியாகச் சென்று தருகின்ற தன்னார்வலர்கள், நன்கொடை வழங்கும் கொடையாளர்கள், இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கின்ற தோழர்கள் என்று பலரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கிறோம்‘மாமதுரையின் அன்னவாசலை’.
(ந.நி)